
குருநாகல் நகரில் உள்ள கலவன் பாடசாலையொன்றில் தரம் 5 இல் கல்விப்பயிலும் மாணவிகள் 11 பேரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் குருநாகல் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பாடசாலையின் ஆங்கில ஆசிரியர் ஒருவரை குருநாகல் பிரதான நீதவான் பந்துல குணரத்ன பிணையில் விடுதலைச் செய்துள்ளார்.
தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளில் அந்த ஆசிரியர், இன்று (14) விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதானவரே இவ்வாறு விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய ஆசிரியர் தமது பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பெற்றோர்கள் சிலர் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குருநாகல் தலைமையக பொலிஸ் பிரிவின் சார்பில் ஆஜரான பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கலவன் பாடசாலை ஒன்றில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் இளம் மாணவிகள் குழுவொன்றை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் அவதானம் செலுத்திய வடமேல் மாகாண ஆளுநர் தி லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் சேவையை உடனடியாக இடைநிறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வடமேற்கு மாகாண பிரதம செயலாளர், வடமேற்கு பிரதம அமைச்சின் செயலாளர் மற்றும் வடமேற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.