
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச்சேர்ந்தவர்கள் இன்றும் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவிக்கும் விடயம் உண்மையாக இருந்தால் அவர் அவ்வாறானவர்களை இனம் காட்ட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் இல்லாத விடயங்களை தெரிவித்து குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஏல்.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஏல்.எல்.எம். அதாவுல்லாஹ் இவ்வாறு தெரிவித்தார்.
அத்தோடு, ஈஸ்டர் குண்டு தாக்குதலின் சூத்திரதாரி யாராக இருந்தாலும் அவர் கண்டறியப்படவேண்டும் என்பதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனவும் எங்களால் நீதியை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டாலும் இறைவனின் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஏல்.எல்.எம். அதாவுல்லாஹ் மேலும் தெரிவித்தார்.
மேலும், ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் பயிற்சி பெற்றவர்கள் நாட்டில் இருப்பதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் அன்று தெரிவித்தபோது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறியதால் பாரியதொரு அழிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதேநேரம் தற்போதும் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச்சேர்ந்தவர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்திருக்கிறார்.
இதன்படி, சந்திரகாந்தன் இந்த அரசாங்கத்தில் இருப்பவர் என்பதினால் குறித்த விடையம் தொடர்பில் அவர் வெளிப்படுத்தி, அப்படியானவர்களை இனம்காட்ட வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாமல் இல்லாத விடயங்களை தெரிவித்து நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.