
அஸ்வசும சமூக நலத்திட்டத்தின் கீழ் 800,000 குடும்பங்கள் இன்னும் ஜூலை மாதம் தொடர்பான சமுர்த்தி மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை பெறவில்லை என தெரியவந்துள்ளது.
இதன்படி ஜுலை மாதம் தொடர்பான முழு கொடுப்பனவுகள் 12 இலட்சம் குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய குடும்பங்களுக்கான கொடுப்பனவுகளை அடுத்த இரண்டு மாதங்களில் பூர்த்தி செய்ய முடியும் எனவும் நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் ரத்னசிறி ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்தோடு, ‘அஸ்வசுமா’ நலத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட பயனாளிகளின் பட்டியலுக்கு எதிராக சுமார் 10 இலட்சம் முறைந்பாடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நலன்புரி சபை பெற்றுள்ள நிலையில் 10 இலட்சம் முறையீடுகளில் 7 இலட்சம் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மீதமுள்ள 3 இலட்சம் மனுக்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக மேலதிக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர 5 இலட்சம் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் பல்வேறு பிரச்சினைகளால் ஜூலை மாதத்திற்கான சமூர்த்தி உள்ளிட்ட கொடுப்பனவுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்குள் தற்போதுள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, அடுத்த வருடம் (2024) ஜனவரி மாதம் முதல் எவ்வித தாமதமும் இன்றி கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலதிக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.