
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பாவனையாளர்களுக்கு மாதாந்த ரீதியாக வழங்கப்பட்டு வந்த நீர் கட்டண பட்டியல் நேற்று (01) முதல் வழங்கப்படமாட்டாது என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, அதற்கு பதிலாக குறுந்தகவல் (SMS) மற்றும் மின்னஞ்சல் (e.Bill) ஊடாகவே மாதாந்த நீர்க் கட்டண விபரங்கள் பாவனையாளர்களுக்கு அனுப்பபடும் எனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
சுற்றுச் சூழல் நன்மையை பாதுகாத்தல், செலவுகளை குறைத்தல், தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தல் போன்ற காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாவனையாளர்களுக்கு மாதாந்தம் நீர்க் கட்டண விபரங்கள் அவர்களது தொலைபேசிக்கு குறுந்தகவல்கள் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் நிலையில் அவற்றினை பயன்படுத்தி கட்டணங்களைச் செலுத்த முடியும்.
இதேவேளை, நீர்ப் பாவனையாளர்கள் தங்களின் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரிகளை சரியாக பதிவு செய்துகொள்ள தவறியிருப்பின், நீர்மானி வாசிப்பாளர்கள் சமூகம் தருகின்ற போது அவர்களுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ள முடியும் எனவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
மேலும், பாவனையாளர்கள் இது தொடர்பில் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் 1939 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.