New Updates! Fresh news just arrived.

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந...

News

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து மேலும் 1132 படையினர்!

June 26, 2026 6:27 pm
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து மேலும் 1132  படையினர்!
ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை பணிகளுக்காக இலங்கையிலிருந்து மேலும் 1132 பேர் கொண்ட படையினர் புறப்படவுள்ளனர்.

இதில் பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த 900 இராணுவத்தினரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 189 அதிகாரிகளும், நாட்டின் இராணுவ வரலாற்றிலேயே முதன்முறையாக கண்ணிவெடிகள் மற்றும் பொறிகளை செயலிழக்கச் செய்வதற்கான விசேட பயிற்சி பெற்ற 43 பெண் இராணுவ வீரர்களும் உள்ளடங்குகின்றனர்.

இது தவிர, கவச வாகனங்கள், இலங்கையில் தயாரிக்கப்பட்ட 'யூனிபஃபல்' (Unibuffel) வாகனங்கள் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினால் வழங்கப்பட்ட விசேட குண்டு துளைக்காத வாகனங்கள் 02 என்பனவும் இந்த படையணிக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹைட்டி நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழலைத் தணித்து, அங்கு அமைதியை நிலைநாட்டும் நோக்கில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்தப் படையினர் ஹைட்டிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இப்படையினருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இன்று (26) முற்பகல் பனாகொடை, இலங்கை காலாட்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை பணிகளுக்காக இலங்கையிலிருந்து செல்லும் அதிகளவான படையினரைக் கொண்ட குழு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்க ஜனாதிபதி ஒருவர் வருகை தந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now