New Updates! Fresh news just arrived.

கடலில் மாயமான 4 மீனவர்கள்: 20-க்கும் மேற்பட்ட படகுகளில் இ...

News

கடலில் மாயமான 4 மீனவர்கள்: 20-க்கும் மேற்பட்ட படகுகளில் இன்றைய தினமும் தேடுதல் பணி தீவிரம்!

May 29, 2026 1:04 pm
கடலில் மாயமான 4 மீனவர்கள்: 20-க்கும் மேற்பட்ட படகுகளில் இன்றைய தினமும் தேடுதல் பணி தீவிரம்!
யாழ்ப்பாணம்: வடமராட்சி கடற்பரப்பில் இரண்டு படகுகள் கவிழ்ந்து தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி இன்றைய தினமும் (வெள்ளிக்கிழமை) கடலில் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

20-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் களமிறக்கம்
காணாமல் போனவர்களை மீட்பதற்காகப் பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியிலிருந்து சுமார் 10 படகுகளும், முனை பகுதியிலிருந்து 10-க்கும் மேற்பட்ட படகுகளும் என 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சக மீனவர்கள் இன்று அதிகாலை முதலே கடலுக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, நேற்று முன்தினம் புதன்கிழமை (27) கடலுக்குச் சென்ற இவர்களைத் தேடி சக மீனவர்கள் சென்றிருந்த போதிலும், பலத்த காற்று மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், இன்று வானிலை சற்றே சாதகமாக உள்ளதால் தேடுதல் பணி முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சோகத்தில் மூழ்கிய வடமராட்சி
பருத்தித்துறை - முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற பின்வருவோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்:

பாலச்சந்திரமூர்த்தி இராமகிருஸ்ணன் (வயது 54) மற்றும் அவரது மகனான இராமகிருஸ்ணன் ரவிராஜ் (கற்கோவளம்)
கதிர்காமம் சோதிலிங்கம் (வயது 52) மற்றும் சுமியோம்பிள்ளை சுஜிக்குமார் (வயது 37) (முனை கடற்றொழிலாளர் சங்கம்)
இவர்களின் நிலை என்னவென்று தெரியாததால், கடற்கரையோரம் திரண்டுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கண்ணீருடன் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். இச்சம்பவத்தால் ஒட்டுமொத்த வடமராட்சி பிரதேசமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

அதிகாரிகளின் அலட்சியப் போக்கு: மீனவர்கள் விசனம்
இதேவேளை, மீனவர்கள் காணாமல் போனது குறித்து கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை பிரதிப் பணிப்பாளர் ஆகியோருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டும், கடற்படையினர் தேடுதல் பணியில் ஈடுபடவில்லை என உள்ளூர் மீனவர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அரச தரப்பும் கடற்படையும் காட்டி வரும் இந்த அசமந்தப் போக்கைக் கண்டித்துள்ள மீனவர்கள், தங்களின் சொந்தப் பொறுப்பிலேயே இன்றைய மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

பூ.லின்ரன்
(வடமராட்சி பச்சிளைப்பள்ளி நிருபர்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now