New Updates! Fresh news just arrived.

42 ஆவது தேசிய மீலாதுன் நபி விழாக் குழுவின் மீளாய்வுக் கூட...

News

42 ஆவது தேசிய மீலாதுன் நபி விழாக் குழுவின் மீளாய்வுக் கூட்டம்!

July 14, 2026 4:25 pm
42 ஆவது தேசிய மீலாதுன் நபி விழாக் குழுவின் மீளாய்வுக் கூட்டம்!
அரச அனுசரணையுடன் இம்முறை மிகச் சிறந்த முறையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 42 ஆவது தேசிய மீலாதுன் நபி பிரதான நினைவு அரச விழாவின் ஏற்பாட்டுப் பணிகளின் முன்னேற்றத்தை மறுஆய்வு செய்வதற்கான விசேட குழுக்கூட்டம் இன்றைய தினம் (ஜூலை 14) நீர்கொழும்பு அல்-ஹிலால் முஸ்லிம் வித்தியாலய வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த விசேட கலந்துரையாடல் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், தொழிலாளர் பிரதி அமைச்சரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ஜயசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முனீர் முளப்பர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், நீர்கொழும்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுகத் திலகரத்ன, கம்பஹா மாவட்டச் செயலாளர் லலிந்த கமகே மற்றும் கம்பஹா மேலதிக மாவட்டச் செயலாளர் (நிர்வாகம்) சுகத் கித்சிறி, முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தினுடைய பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நீர்கொழும்பு பிரதேச செயலாளர், நகர சபை / பிரதேச சபை செயலாளர்கள் உள்ளிட்ட மாகாண சபை மற்றும் உள்ளூர் அதிகாரிகள், ஸ்ரீலங்கா காவல்துறை மற்றும் முப்படையினரின் உயர் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அத்துடன் முஸ்லிம் மதத் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாக சபையினர்கள் உட்பட பிரதேச மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் உரையாற்றிய கம்பஹா மாவட்டச் செயலாளர் லலிந்த கமகே, முஸ்லிம் பள்ளிவாசல்களின் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீடு தற்போது அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார். இதன் மூலம் அந்தந்த பிரதேச செயலாளர்கள் ஊடாக பள்ளிவாசல்களின் நிர்வாக சபைகளுக்கு இந்த நிதி விரைவாகக் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இம்முறை 42 ஆவது தேசிய மீலாதுன் நபி பிரதான நினைவு அரச விழாவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் மற்றும் பங்கேற்புடன் ஆரம்பிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த பிரதான விழாவில் 2000 க்கும் மேற்பட்ட பெருந்தொகையான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதற்காக பிரதான விழா தின மேடை மற்றும் நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தல், பிரதேசத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துதல், தேவையான சுகாதார மற்றும் பொது வசதிகளை வழங்குதல் அத்துடன் அன்றைய தினம் வெளியிடப்படவுள்ள விசேட நினைவு நூலின் முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

தேசிய மகாநாட்டுடன் இணையாக சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக நலன்புரிச் சேவைகளை அடிப்படையாகக் கொண்ட விசேட வேலைத்திட்டத் தொடரொன்றை ஆகஸ்ட் மாதத்தில் செயற்படுத்துவதற்கும் குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 23 ஆம் திகதி காமச்சோட பள்ளிவாசலில் நடைபெறும் விசேட மரநடுகை வேலைத்திட்டம், அன்றைய தினமே போருதொட முஸ்லிம் பள்ளிவாசலில் நடைபெறும்.

விசேட இரத்ததான சமூக நலன்புரி முகாம் மற்றும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி பிற மத சகோதர மக்களிடையே கலாசார புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக பெரியமுல்லை முஸ்லிம் பள்ளிவாசலில் நடைபெறும் "Visit my mosque" (எனது பள்ளிவாசலுக்கு வருகை தாருங்கள்) வேலைத்திட்டம் ஆகியன இதில் அடங்கும்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now