New Updates! Fresh news just arrived.

இரத்மலானையில் ஆயுதங்கள் மற்றும் பணத்துடன் 6 பேர் கைது - G...

News

இரத்மலானையில் ஆயுதங்கள் மற்றும் பணத்துடன் 6 பேர் கைது

August 8, 2026 7:31 am
இரத்மலானையில் ஆயுதங்கள் மற்றும் பணத்துடன் 6 பேர் கைது
இரத்மலானை கொனா கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கையின்போது ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மூன்று வாள்கள், கோடரி ஒன்று, மூன்று கத்திகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபாய் பணமும், எட்டு கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவத்துக்கு முன்னதாக, கல்கிசை பொலிஸாரின் விசேட மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இரத்மலானை ஆதர் பகுதியில் மேற்கொண்ட சோதனையில், ஒருவரை 1,000 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்திருந்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் பெறப்பட்ட இடம் மற்றும் அதனை விற்பனை செய்வதாக சந்தேகிக்கப்படும் வீடு தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது ஆயுதங்கள், பணம் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டின் நுழைவாயிலில் “சுபுன் சர்பயா நுழைவது தடை” என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர் 29 வயதுடையவர் எனவும், ஏனையவர்கள் 22 முதல் 51 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இரத்மலானை, நாவலப்பிட்டி மற்றும் எஹெலியகொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now