கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்ட ஊழிய...
கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது: பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை!
இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்டத்தில் இருந்து நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாதது என 2026ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் கைத்தொழில் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் பணியாற்றும் 83 ஊழியர்களுக்கு கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதால் அவர்களின் வாழ்க்கை மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளது. 39வது நாளாக தொடர்ச்சியாக ஆரப்பாட்டம் செய்தும் சம்பளப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பள நிலுவை தொடர்பாக பல முறைகள் மேலதிகாரிகளுக்கும், அலங்கை கனிப் பொருள் கூட்டுத்தாபனத் தலைவர், அமைச்சின் செயலாளருக்கும் பல தடவைகள் முறையிட்டும் இதுவரையும் தீர்வு கிடைக்காத நிலையில் தொடர் சத்தியாக்கிரக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கௌரவ கைத்தொழில் அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்தி அவர்களிடம் ஊடகவியலாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் 83 பேர்களுக்கான சம்பள நிலுவையும் அவர்களுக்கான சம்பளமும் உடனடியாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கௌரவ அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால் இதுவரையும் 83 இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பள நிலுவை இதுவரையும் வழங்கப்படாத நிலை தொடர்கிறது. எனவே, புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் 83 ஊழியர்களின் சம்பள நிலுவையையும், சம்பளத்தையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் அவர்கள் மேற்கொள வேண்டும்.
இதேவேளை முன்னாள் கைத்தொழில், சுகாதார அமைச்சராக பதவி வகித்த திரு. ரமேஸ் பத்திரன அவர்கள் காலி மாவட்டத்தில் இருந்து 17 பேருக்கு தற்காலிக ஊழியர் நியமனங்கள் சென்ற 2023ம்ஆண்டு டிசம்பர் மாதத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்த 17 பேருக்கான சம்பளம், மேலதிக கொடுப்புனவுகள், விடுதிகள், இலவச மின்சார வசதிகள் மற்றும் நீர் வசதிகள் உட்பட பல வசதிகளும் இன்றுவரை வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தினுடைய 83 ஊழியர்களின் விடயத்தில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பான செயற்பாடுகளின் கடிதங்களின் பிரதிகளை இப்பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன் என தெரிவித்தார்.