கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரிசால் பாதிக்கப்பட்ட நீர் விநி...
கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரிசால் பாதிக்கப்பட்ட நீர் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கண்டி, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த மாவட்டங்களில் அமைந்துள்ள சில நீர் வழங்கல் திட்டங்கள் அதிகபட்ச திறனில் இயங்காததால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் இயங்கும் பல நீர் வழங்கல் திட்டங்களின் செயற்பாடுகளுக்குத் தடை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, நாடு முழுவதும் 343 நீர் வழங்கல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றில் 156 நீர் வழங்கல் திட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
இதனால், சபையினால் வழங்கப்படும் நீரைப் பயன்படுத்தும் பெருமளவான பாவனையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டங்களில் 126 திட்டங்கள் நேற்று வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
எனினும், 30 நீர் வழங்கல் திட்டங்களை இயங்கு நிலைக்குக் கொண்டு வருவதற்கு நீர் வழங்கல் சபையின் ஊழியர்கள் பணியாற்றி வருவதுடன், இதற்காக ஓய்வுபெற்ற ஊழியர்களும் தன்னார்வமாக முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மண்சரிவு காரணமாக வீதிகள் தடைப்படுதல், நீர் குழாய்களுக்குச் சேதம் ஏற்படுதல், மின் விநியோகம் தடைப்படுதல், நீரைப் பெற்றுக் கொள்ளும் இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருத்தல் மற்றும் மின் மற்றும் இயந்திர உபகரணங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், நீர் வழங்கல் திட்டங்களை முழுமையாக வழமைக்குக் கொண்டு வருவதற்குச் சில நாட்கள் செல்லலாம் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் நாட்டின் பல இடங்களிலும் மின்சார கட்டமைப்பை வழமைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.