யதார்த்தமாக சிந்தித்தவர் சிந்தனையை நிறுத்திக் கொண்டார்: ட...
யதார்த்தமாக சிந்தித்தவர் சிந்தனையை நிறுத்திக் கொண்டார்: டக்ளஸ் தேவானந்தா இரங்கல்!
கிழக்கு எமக்கு அளித்த மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான செல்லையா இராசதுரை அவர்களின் வாழ்வு நிறைவுற்றிருக்கிறது.
சொல்லின் செல்வர் என்று விதந்துரைக்கப்படும் அன்னாரின் இழப்பு அவரை நேசித்த மக்களுக்கு நிச்சயம். பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அமரரின் இழப்புக் குறித்து அவர் விடுத்துள்ள அனுதச் செய்தியில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு கிழக்கு மக்களின் உணர்வுகளை நெஞ்சில் சுமந்து அரசியலில் ஈடுபட்ட அமரர் இராசதுரை அவர்கள், வெறுமனே உணர்ச்சி அரசிலுக்குள் மக்களை இழுத்துச் சென்று அவதிக்குள்ளாக்காமல், தான் சார்ந்த மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் வென்றெடுப்பதற்கு யதார்த்த வழிமுறைகளையும் கையாண்டு இருந்தார்.
அன்றைய இளைஞர்களாகிய எமக்கு அன்னாரின் அன்றைய தீர்மானங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
எனினும், கால ஓட்டம் அவரின் தீர்மானங்களிலும் ஒரு வகை நியாயம் இருப்பதை புரிய வைத்திருந்தது.
இந்நிலையிலே வயது மூப்புக் காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அன்னார் இராசதுரை அவர்களின் வாழ்வு நிறைவுற்றிருக்கின்றது.
அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினர் மற்றும் அவரை நேசித்த மக்களுக்கு ஆறுதலையும், அன்னாருக்கு ஆழ்மன அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் - என்றுள்ளது.
பு.கஜிந்தன்