15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம்!
15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம்!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இதுவரை சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்களினை அடையாளம் கண்டுள்ளதோடு, அந்த இடங்களில் இருந்த சுமார் 5,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அத்தோடு, குறித்த இடங்களில் வசிக்கும் மக்கள் கட்டாயமாக அவ்விடங்களில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் குறித்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.
பிரதேச கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்த பின்னர், பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஊடாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கிடைக்கும் சம்பவங்கள், முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படும் என்றும் கலாநிதி வசந்த சேனாதீர மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று (08) மாலை 4 மணிக்கு 4 மாவட்டங்களினைச் சேர்ந்த 41 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
5 மாவட்டங்களைச் சேர்ந்த 31 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 2ஆம் கட்டத்தின் கீழ் (அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, 1ஆம் கட்டத்திற்கு கீழ் அவதானமாக இருக்குமாறும் விடுக்கப்பட்டுள்ளஎச்சரிக்கை மேலும் 4 மாவட்டங்களினை சேர்ந்த 19 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
மேலும், வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை ஓரளவிற்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அபாயகரமான இடங்களில் வசிக்கின்ற மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களிலுள்ள மக்கள் அங்கேயே தங்கியிருக்குமாறும், தேவையற்ற பயணங்களினை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இல்லாவிடின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக்கூடும் என்றும் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர குறிப்பிட்டார்.