தமிழரசு கட்சியின் பாதீடு நாவிதன்வெளியில் வெற்றி.முஸ்லிம் ...
தமிழரசு கட்சியின் பாதீடு நாவிதன்வெளியில் வெற்றி.முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் சுயேட்சை குழு ஆதரவு!
நாவிதன்வெளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவுத் திட்டம்( நிதியறிக்கை) இன்று காலை 9:30 மணியளவில் (11) வியாழக்கிழமை நிறைவேறியது.
நாவிதன்வெளி பிரதேச சபையினுடைய தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் மாதாந்த கூட்டம் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்று நடைபெற்றபோதே மேலதிக 08 வாக்குகளினால் நிதியறிக்கை வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக , அண்மைய பேரிடரில் உயிர்நீத்த உறவுகளுக்கு இரண்டு நிமிடம் நினைலவஞ்சலி செலுத்தப்பட்டது.
அடுத்த வருடத்திற்கான குறித்த வரவு செலவுத்திட்டத்திற்கு 08 உறுப்பினர்களின் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் கோபாலசிங்கம் உதயகுமார், தெய்வேந்திரன் கிருபாகரன், த.சித்திர குமார், சோ.கமலேஸ்வரன் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.பி.நிவாஸ்,மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் லத்தீப் சுயேட்சை குழு உறுப்பினரும் உதவி தவிசாளருமாகிய கு. புவனரூபன் , உறுப்பினர் யொணிபஸ் யூஜின் ஆகியோர் ஆதரவாகவும் வாக்களித்தனர்.
சுயேட்சை குழு உறுப்பினர்கள் அ.நளீர்,அ.சௌதியா ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குஞ்சரமூர்த்தி நிரோஜன் நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சமயம் சபையினுடைய 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததோடு, சுயேட்சை குழு உறுப்பினரும் முன்னாள் பிரதேச சபையினுடைய தவிசாளர் அமரதாஸ ஆனந்த சபையில் பிரசன்னமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தவிசாளரான இந்திரன் ரூபசாந்தன் தலைமையிலான முதலாவது வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மையோடு நிறைவேறியுள்ளது.
நூருல் ஹுதா உமர்