யாழ். கோட்டையை சுற்றிவர எல்லைக்கல் நாட்டும் பணியில் தொல்ல...
யாழ். கோட்டையை சுற்றிவர எல்லைக்கல் நாட்டும் பணியில் தொல்லியல் திணைக்களம்!
யாழ்ப்பாணம் கோட்டையினை சுற்றிவர உள்ள பகுதியில் தொல்பொருள் சின்னங்கள் புதைந்திருக்கலாம் என்கின்ற வகையில் தொல்பொருள் திணைக்களமானது எல்லைக் கல் இடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
இதன் காரணமாக முற்றவெளி மைதானத்திற்குள் நுழைய முடியாதவாறு எல்லைக்கல் நாட்டப்படுவதாக யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரான ரத்னம் சதீஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் எல்லை கல்லின் அளவிற்கு குறித்த எல்லையை இடுமாறு நாங்கள் கோரினோம். அதற்கு அவர்கள், அது தங்களுக்குரிய பிரதேசம் என்றும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாநகர சபை உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் அனுமதி எடுத்த பின்னரே இவ்வாறு எல்லை இல் நாட்டுவதாக கூறினர்.
வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபியில் நாங்கள் நினைவேந்தல் செய்வது வழமை. அந்த வளாகத்திற்கு உள்ளே சென்று நாங்கள் நினைவேந்தல் செய்ய வேண்டும். ஆகையால் அந்த பகுதியை விட்டு எல்லை இடுமாறு கோரினோம்.
அதன்படி சிறிய ஒரு வாயில் விட்டு எல்லைக்கல் நாட்டப்படுகிறது. வாயிலுக்கு கதவு போடுமாறு அவர்கள் கூறினர்.
மேலும், இது தொல்பொருள் திணைக்களத்தினுடைய பகுதி, ஆகையினால் யாரும் இதனை தடுக்க முடியாது எனவும் கூறுகின்றனர். யாழ். மாநகர சபை இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கிறதா என பார்ப்போம் என தெரிவித்தார்.
பு.கஜிந்தன்