New Updates! Fresh news just arrived.

தையிட்டியில் கைதானவர்கள் பிணையில் விடுவிப்பு!

News

தையிட்டியில் கைதானவர்கள் பிணையில் விடுவிப்பு!

December 21, 2025 1:51 pm
தையிட்டியில் கைதானவர்கள் பிணையில் விடுவிப்பு!

தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.





சந்தேகநபர்கள் இன்றைய தினம் மல்லாகம் பதில் நீதவான் காயத்திரி அகிலன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.





இதன்போது அவர்களை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.





இந்நிலையில் குறித்த வழக்கினை எதிர்வருகின்ற 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்காக அழைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.





தையிட்டி 'திஸ்ஸ' விகாரைக்காகச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் பதவி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விகாரைக்கு முன்பாக இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.





குறித்த போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றிருந்தனர்.





பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட 29 பேர் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என பெயர் குறிப்பிட்டுத் தடையுத்தரவானது பெறப்பட்டிருந்தது.





இந்நிலையில், இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளையில், விகாரையினை அண்மித்த சூழலில் கலகம் அடக்கும் பொலிஸார் உட்படப் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.





"இது ஓர் அமைதிவழியான போராட்டம். இங்கு எவ்விதத்திலும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கப்படவில்லை. விகாரைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செல்லவோ, விகாரைக்குச் சேதம் விளைவிக்கவோ இல்லை.





அவ்வாறிருக்கையில், விகாரைக்குச் செல்லும் வீதியினை நீங்கள் எவ்வாறு அடாத்தாக மறித்து வைத்திருக்க முடியும்?" எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரோடு தர்க்கத்தில் ஈடுபட்டனர்.





இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வலி. கிழக்கு பிரதேச சபையினுடைய தவிசாளர் தியாகராசா நிரோஷ், சிவகுரு ஆதீன முதல்வரான வேலன் சுவாமிகள் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபையினுடைய உறுப்பினர்கள் உள்ளிட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.






https://youtu.be/BIFiiK4jTRQ?si=N1IdRQ4Am1fE_LHu

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now