பொதுமக்களுக்கு கணினி அவசர தயார் நிலை குழு விடுத்துள்ள எச்...
பொதுமக்களுக்கு கணினி அவசர தயார் நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கை
இணையத்தளங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி மேற்கொள்ளப்படும் பண மோசடி சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக கணினி அவசர தயார் நிலை குழு தெரிவித்துள்ளது.
இணைய வழியாக பொருட்களை கொள்வனவு செய்யும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்து சரியான மற்றும் நம்பகமான தகவல்களை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அதன் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாக கூறி தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நடைபெறும் பண மோசடிகள் தொடர்பாக கடந்த சில நாட்களாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அறிமுகமில்லாத நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு வங்கி கணக்கு விவரங்கள், OTP குறியீடுகள் அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் தொடர்பில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.