திட்வா புயல் பாதிப்பு: வீடமைப்புத் தொகுதிகளை நிர்மாணிக்க ...
திட்வா புயல் பாதிப்பு: வீடமைப்புத் தொகுதிகளை நிர்மாணிக்க திட்டம்!
"திட்வா" புயலினால் அழிவடைந்த வீடுகளுக்காக வீடமைப்புத் தொகுதிகளை (Housing Complexes) நிர்மாணிக்கத் திட்டமிட்டு வருவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (22) அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதற்காக மாவட்ட செயலாளர்கள் ஊடாக மாற்று காணிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், குறுகிய காலத்திற்குள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
"6,000 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
வீடுகள் சேதமடையாவிட்டாலும் தொடர்ந்து வசிக்க முடியாத பிரதேசங்கள் மற்றும் பாதுகாப்பற்ற பிரதேசங்கள் உள்ளன. அங்கு தொடர்ந்து குடியிருக்க முடியாது.
இவற்றை நாம் படிப்படியாகச் செய்யத் தயாராக உள்ளோம். இதற்காக மாவட்ட செயலாளர்கள் ஊடாக மாற்று காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பெரும்பாலான இடங்களில் வீடமைப்புத் தொகுதிகளை அமைப்பதே எமது திட்டமாகும்.
இதற்குத் தேவையான நிதியுதவிகளை வழங்க ஜனாதிபதி செயலகமும் இப்பணியில் ஈடுபட்டுள்ளது.
அமைச்சு என்ற ரீதியில் இந்த வீடமைப்புத் தொகுதிகளுக்கான அடிப்படைத் திட்டங்களை வகுத்து வருகிறோம், இது குறித்து உரிய அதிகாரிகள் தேவையான நிபுணர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.
குறுகிய காலத்திற்குள் இந்த அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளில் வசித்த குடும்பங்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குத் திருப்புவதுடன், மீண்டும் இவ்வாறானதொரு அனர்த்தத்தை எதிர்கொள்ளாத வகையில் அதிக ஆபத்துள்ள வலயங்களில் உள்ள மக்களை வேறு பகுதிகளில் குடியமர்த்த நாம் எதிர்பார்த்துள்ளோம்," எனத் தெரிவித்தார்.