New Updates! Fresh news just arrived.

இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கான தொடரு...

News

இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கான தொடருந்து சேவைகள் வழமைக்கு

December 24, 2025 4:24 am
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கான தொடருந்து சேவைகள் வழமைக்கு

நாட்டின் வடக்கு தொடருந்து மார்க்கம் இன்று (24) முதல் பயணிகள் தொடருந்து போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.





இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான யாழ்தேவி கடுகதி தொடருந்து சேவை இன்று முதல் அதன் வழக்கமான கால அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.





அதற்கமைய, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து காலை 6:40 க்குப் புறப்படும் தொடருந்து, பிற்பகல் 2:32 க்குக் காங்கேசன்துறை நிலையத்தைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





அத்துடன், காங்கேசன்துறையிலிருந்து முற்பகல் 10:30 க்குப் புறப்படும் தொடருந்து, மாலை 6:54 க்குக் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.





இந்த தொடருந்தின் முதலாம் வகுப்பு (குளிர்சாதன வசதி) மற்றும் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளுக்கான ஆசன முன்பதிவு வசதிகளையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அதேவேளை, மட்டக்களப்பு வரையான கிழக்கு தொடருந்து மார்க்கத்தின் சேவைகளும் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.





கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும் பயணிகள், காலை 6 மணிக்கு திருகோணமலை நோக்கிப் புறப்படும் தொடருந்தில் பயணித்து, கல் ஓயா சந்தி தொடருந்து நிலையத்தை அடைய வேண்டும்.





பின்னர் அங்கிருந்து மதியம் 12:40 க்குப் புறப்படும் இலக்கம் 6011 ஐ கொண்ட தொடருந்து ஊடாக மட்டக்களப்பைச் சென்றடைய முடியும்.





அதேநேரம், மட்டக்களப்பிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் தொடருந்தில் கல் ஓயா சந்தி நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து கொழும்பு நோக்கிய தொடருந்தில் பயணிகள் தமது பயணத்தைத் தொடரலாம் என தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now