மக்களையும் கிராம சேவகர்களையும் மோத விடாதீர்கள்: மக்கள் கோ...
மக்களையும் கிராம சேவகர்களையும் மோத விடாதீர்கள்: மக்கள் கோரிக்கை!
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு என வழங்கப்படுகின்ற 15 ஆயிரம் ரூபா நிதியால் கிராம சேவகர்களினையும் மக்களையும் மோத விடாதீர்கள் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என அரசாங்கத்தால் 25ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்காக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த பதிவுகள் தற்போது நிறைவடைந்த நிலையில் இரண்டாவது கட்டமாக அதே குடும்பங்களினை சேர்ந்த மாணவர்களுக்கு 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்காக பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
25 ஆயிரம் ரூபா கொடுப்பவானது சிறிய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட, சிறிய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வசதி படைத்த அனைவருக்கும் வழங்கப்பட்ட கொடுப்பனவு. குறித்த குடும்பத்திற்கு மீண்டும் 15ஆயிரம் ரூபா கொடுப்பதற்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெள்ளத்தினால் பாதிக்கப்படாத, மிகவும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்கள் உள்ளன. குறித்த குடும்பங்களில் 3,4 பிள்ளைகள் கூட கல்வி கற்கின்ற நிலை காணப்படுகின்றது. அவர்கள் அந்த கொடுப்பனவுக்கு உள்வாங்கப்படாமல் போகின்ற சூழ்நிலையும் அங்கே காணப்படுகிறது.
வசதி படைத்தவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன வகையில் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது, அதேவேளை, குறித்த குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நிவாரணம் கிடைக்காத நிலையில் கிராம சேவகர்கள், மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுடன் முரண்படுகின்றனர். இந்த அனர்த்தத்தில் உத்தியோகத்தர்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் பணி புரிந்தார்கள். இந்நிலையில் இது அவர்களை மேலும் மனவுளைச்சலுக்கு உள்ளாக்கும்.
இந்த கொடுப்பனவு கிடைக்காத பல வறிய மாணவர்கள் மனவேதனைக்குள்ளும் தள்ளப்படக்கூடய சூழ்நிலை காணப்படுகிறது. எனவே இந்த கொடுப்பனவானது அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு அனைவருக்கும் வழங்கும்போது மாணவர்களுக்துள்ளும் மனஸ்தாபங்கள் ஏற்படாது.
மேலும், இது குறித்து அரசாங்கமமும், அரச அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கையினை எடுக்க வேண்டும். அரசாங்க அதிபர் இதனை ஆளுநர் மட்டத்திற்கு கொண்டு சென்ற அனைத்து மாணவர்களுக்கும் கொடுப்பனவு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.
பு.கஜிந்தன்