நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு: ...
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு: பொதுமக்களுக்கான எச்சரிக்கை!
நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை குறித்து பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டினை இன்று கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரால் மேற்கொண்டுள்ளதோடு, நாய்கள் வெட்டப்பட்டு ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளதாக அம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்தில் உள்ள பனை மரம் ஒன்றில் நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளதுடன் மற்றுமொரு நாய் இறந்த நிலையில் காணப்படுகின்றது.
இன்று (01) புது வருட பிறப்பினை முன்னிட்டு ஏனைய இறைச்சி வகைகளோடு கலப்பதற்காக குறித்த நாய்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும் மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
மேலும், அங்கு ரெஜிபோம் பெட்டிகள் உட்பட சந்தேகத்திற்கிடமான பொருட்களும் காணப்படுகின்றது.
இவ்வாறான சம்பவங்களானது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதோடு, ஆட்டு இறைச்சி போன்று நாய் இறைச்சி விற்பனை செய்த சம்பவங்களும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
பாறுக் ஷிஹான்