New Updates! Fresh news just arrived.

விலங்குகள், தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை சட்டமூலங்கள் ந...

News

விலங்குகள், தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை சட்டமூலங்கள் நிறைவேற்றம்!

August 6, 2026 6:41 pm
விலங்குகள், தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை சட்டமூலங்கள் நிறைவேற்றம்!
விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய இரு சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் இன்று (06) நிறைவேற்றப்பட்டன.

குறித்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இன்று முற்பகல் 11.45 மணி முதல் பிற்பகல் 5.40 மணி வரை நடைபெற்றது.

விலங்குகள் (திருத்தச்) சட்டமூலத்தை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் 2026.07.21 அன்று பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டிற்காக சமர்ப்பித்திருந்தார்.

இச்சட்டமூலத்தின் மூலம், இதற்கு முன்னர் மாடுகள் மற்றும் எருமைகளைப் போக்குவரத்து செய்வதற்கு மட்டுமே பொருந்தியிருந்த சட்ட ஏற்பாடுகளை மேலும் பல வகையான விலங்குகளுக்கும் விரிவுபடுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்காலத்தில் பன்றிகள், செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைப் போக்குவரத்து செய்யும்போது உரிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்படுவதுடன், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய நோய்கள் பரவுவதைத் தடுப்பது இதன் பிரதான நோக்கமாகும்.

தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை (திருத்தச்) சட்டமூலம் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சரினால் 2026.07.21 அன்று பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்டது.

இச்சட்டமூலத்தின் மூலம், தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபையின் நிறுவன ரீதியான செயல்திறனை மேம்படுத்துதல், நீர் வழங்கல் சேவைகளின் முகாமைத்துவத்தை மேலும் ஒழுங்குபடுத்துதல் மற்றும் சபையின் பொறுப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now