New Updates! Fresh news just arrived.

மின்சாரம் மற்றும் எரிபொருள் தொடர்பில் வெளியான அறிவிப்பு -...

News

மின்சாரம் மற்றும் எரிபொருள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

April 22, 2026 10:25 am
மின்சாரம் மற்றும் எரிபொருள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளான மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என புதிய எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி தனது பதவி விலகியதையடுத்து, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவை புதிய எரிசக்தி அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்தார்.

நிலக்கரி இறக்குமதி தொடர்பான ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவின் விசாரணைகள் சுயாதீனமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னாள் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் ஊடகங்களிடம் பேசிய அவர் குறிப்பிட்டதாவது, தற்போதைய நிலையில் திட்டமிடப்பட்ட மின்விநியோகத்தடை எதனையும் நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. முந்தைய குழுவினர் வகுத்துள்ள திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினாலே மின்வெட்டு இன்றி சேவையை வழங்க முடியும்.

அமைச்சரவை மாற்றங்கள் ஏற்பட்டாலும், நாட்டின் தேசிய எரிசக்திக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இருக்காது.

நீண்டகால இலக்குகளை நோக்கியே திட்டங்கள் அமையும்.

அமைச்சின் வெளிப்படைத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், வெறும் ஊடக சந்திப்புகளை நடத்தாமல், முறையான ஆதாரங்கள் இருந்தால் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அல்லது காவல்துறையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு சவால் விடுத்தார்.

மத்திய கிழக்கு நாடுகளின் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை மாற்றம் போன்றவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்றாலும், அதன் தாக்கம் மக்கள் மீது விழாதவாறு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

"புதிய அமைச்சராக நான் பிரம்மாண்டமான மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியமில்லை; ஏற்கனவே போடப்பட்டுள்ள திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான கொள்கை ரீதியான ஆதரவையும், அரச தலையீட்டையும் வழங்கினாலே போதுமானது," என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now