New Updates! Fresh news just arrived.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நட...

News

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கை!

August 17, 2026 1:17 pm
கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கை!
கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிய சிற்றூழியர்களாக ஒன்பது பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை குறித்து ஏற்பட்டுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, வைத்தியசாலையினுடைய நிரந்தர சேவையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று எதிர்ப்பு நடவடிக்கையொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தேவையற்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே குறித்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

புதிய சிற்றூழியர்களாக நியமிக்கப்பட்ட ஒன்பது பெண் ஊழியர்கள் தமது கடமைகளினை பொறுப்பேற்பது குறித்து ஏற்பட்டுள்ள சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக மற்றும் அரசியல் மட்டத்திலும் கவனத்தினை ஈர்த்துள்ள நிலையில், தற்போது வைத்தியசாலை ஊழியர்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களும் இதில் தலையிட்டுள்ளன.

இதேவேளை, தொழிற்சங்கங்களினுடைய எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளிகளுக்கும் அவர்களுக்கான அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய சிற்றூழியர்களினுடைய நியமனம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றினை பெற்றுக்கொள்வதோடு, வைத்தியசாலையின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் ஊழியர்களினுடைய பணிச்சூழல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே குறித்த தொழிற்சங்கங்களின் பிரதான கோரிக்கையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலை என்பது பொதுமக்களினுடைய உயிர் மற்றும் சுகாதாரத்தோடு, நேரடியாக தொடர்புபட்ட நிறுவனமாக இருப்பதினால், நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கிடையில் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வொன்றினை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் தொழிற்சங்கத் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கல்முனை ஆதார வைத்தியசாலையில் நிலவுகின்ற தற்போதைய நிலைமை மேலும் தீவிரமடையாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்போடு செயற்பட்டு, நோயாளிகளினுடைய நலனை முதன்மைப்படுத்தி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now