New Updates! Fresh news just arrived.

அலெக்ஸ் கொலையுடன் தொடர்புடைய பொலிஸாருக்கு பணி நியமனமும் ப...

News

அலெக்ஸ் கொலையுடன் தொடர்புடைய பொலிஸாருக்கு பணி நியமனமும் பதவி உயர்வும்: சுகாஷ் கடுமையான கண்டனம்!

April 10, 2026 6:37 pm
அலெக்ஸ் கொலையுடன் தொடர்புடைய பொலிஸாருக்கு பணி நியமனமும் பதவி உயர்வும்: சுகாஷ் கடுமையான கண்டனம்!
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸாரால் சித்திரவதைக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் வழக்குடன் தொடர்புடைய பொலிஸாருக்கு மீள் பணி நியமனமும், பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளமை எத்தனை அலெக்ஸ்களை உருவாக்க திட்டம். இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவரது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரியவருகையில்,

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அலெக்ஸ் என்ற இளைஞன் சில வருடங்களுக்கு முன்பு பொலிஸ் காவலில் வைத்து சித்திரவதைக்கு உள்ளான நிலையில் மரணமடைந்திருந்தான்.

அது ஒரு கொலை என்று குடும்பஸ்தவர்களும் நாங்களும் சந்தேகம் தெரிவித்திருந்த நிலையில் குறித்த பொலிஸ் நிலையத்தை சேர்ந்த நான்கு பொலிஸார் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

ஏனைய நாடுகளில் இடைநிறுத்தப்பட்ட பொலிஸாருக்கு பதவி இறக்கங்களும், தர நிலைகளை குறைத்தலும், குற்றம் செய்யவில்லை என நிரூபிக்கப்படும்வரை அவர்கள் கடமைக்கு திரும்புவதை தடுத்தலும்தான் இடம்பெற்று வருகிறது.

ஆனால் இலங்கையில் விசித்திரமாக, அந்த கொலை வழக்குடன் தொடர்புடைய பொலிஸாருக்கு மீளவும் பணி நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் சட்ட, நீதி செயற்பாடுகளுக்கு அவமானகரமான விடயம் என்னவென்றால், அலெக்ஸ் கொலை வழக்கில் சந்தேகநபரான ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்கு நிலைய பொறுப்பதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது மனித உரிமைகளை மதிக்காத ஒரு அப்பட்டமான செயற்பாடு.

அவர் குற்றமற்றவர் என இன்னும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படவில்லை. அவர் உண்மையிலேயே குற்றமிழைத்து இருந்து, அத்தகைய ஒரு குற்ற மனம்படைத்த நபராக இருந்தால், ஒரு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றுகின்றபோது அலெக்ஸ் போன்று எத்தனை அலெக்ஸ்களை இவர்கள் உருவாக்குவார்கள்?

ஆகவே இந்த விடயத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் மீளவும் பணிக்கு நியமிக்கப்பட்டதையும், பதவி உயர்வு வழங்கப்பட்டதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த வழக்கில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டாலே தவிர, அவர்களுக்கு எதிராக சாதாரண சட்டதிட்டங்களின் பிரகாரமும், பொலிஸாருக்குரிய ஒழுங்கு விதிகளின் பிரகாரமும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோருகிறோம் என்றார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now