New Updates! Fresh news just arrived.

அட்டாளைச்சேனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்:...

News

அட்டாளைச்சேனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: வீதி, வடிகால், கல்வி திட்டங்களுக்கு முன்னுரிமை!

April 29, 2026 4:59 pm
அட்டாளைச்சேனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: வீதி, வடிகால், கல்வி திட்டங்களுக்கு முன்னுரிமை!
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும் குழுத் தலைவருமான ஏ. ஆதம்பாவா தலைமையில், பிரதேச செயலாளர் அஹமட் அப்கர் ஒருங்கிணைப்பில் இக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினரான அஷ்ரப் தாஹிர் கலந்து கொண்டு, பிரதேச மக்களினுடைய அத்தியாவசிய தேவைகள் மற்றும் நீண்டகால அபிவிருத்தி தொடர்பான பல்வேறு முக்கிய முன்மொழிவுகளினை முன்வைத்தார்.

கூட்டத்தில் வீதி புனரமைப்பு, வடிகால் வசதிகள், கல்வி மேம்பாடு மற்றும் வெள்ள அனர்த்த முகாமைத்துவம் ஆகியவை முக்கியமாக பேசப்பட்டன. ஒலுவில் பிரதேசத்தில் வைத்தியசாலை வீதி, லைட் ஹவுஸ் வீதி குறுக்குத் தெருக்கள், அன்சாரி ஜும்ஆ பள்ளி வீதி, மத்திய வீதி, பழைய தபால் வீதி உள்ளிட்ட பல வீதிகளை காபட் வீதிகளாக மாற்றி புனரமைக்க கோரப்பட்டது. மேலும் லைட் ஹவுஸிலிருந்து துறைமுகம் வரை காபட் வீதி அமைத்து மின் இணைப்பும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதேபோல் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மைதானத்தின் மேற்குப் பகுதியில் புதிய வடிகான்கள் அமைத்து வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாப்பு வழங்குவதும், வைத்தியசாலை வீதி மற்றும் துறைமுக வீட்டுத்திட்டத்தை இணைக்கும் குறுக்கு வீதிகளை அமைப்பதும் முன்மொழியப்பட்டது.

பாலமுனை பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் பாதை மற்றும் வடிகால் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக பாலமுனை 04 மற்றும் 05 கிராம சேவகர் பிரிவுகளில் கைவிடப்பட்ட பாதை அமைப்புகள் காரணமாக வெள்ளம் காரணமாக போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அவசரமாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் பாலமுனை 05 கடற்கரை வீதியில் நீர் தேக்கம், தரமற்ற கல்வெட்டு மூடிகள் காரணமாக விபத்து அபாயம் மற்றும் குறுகிய வடிகால் கொள்ளளவு போன்ற பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு தேவைப்படுவதாக வலியுறுத்தப்பட்டதுடன், ஹுசைனியா நகர் மற்றும் பாலமுனை 01, 02 பகுதிகளிலும் புதிய வடிகான்கள் அமைக்க வேண்டிய அவசியம் எடுத்துரைக்கப்பட்டது.

கல்வி அபிவிருத்தி தொடர்பாக அல்-ஜாயிஸ்ஸா மகளிர் கல்லூரி, தாருல் ஹஸனாத் வித்தியாலயம், இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலயம், மின்ஹாஜ் மஹா வித்தியாலயம் மற்றும் அந்நூர் மஹா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு புதிய பலமாடிக் கட்டிடங்கள் மற்றும் வகுப்பறைகள் அமைக்க கோரப்பட்டது. மேலும் தாருல் இல்ம் வித்தியாலயத்திற்கு கதிரைகள் வழங்குதல் மற்றும் இப்னு ஸீனா பாடசாலையின் சேதமடைந்த மண்டபத்தை அவசரமாக புனரமைத்தல் தேவையாக சுட்டிக்காட்டப்பட்டது.

இதனுடன், ஒலுவில் சீனம்பிட்டி வடிச்சல் வாய்க்காலை முறையாக பராமரித்து வெள்ளக் கட்டுப்பாடு ஏற்படுத்துதல், லைட் ஹவுஸ் மின் விளக்கை மீண்டும் செயல்படுத்துதல், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களில் வடிகான்களுக்கு முன்னுரிமை வழங்குதல் மற்றும் பாலமுனை பகுதியில் கலாச்சார மண்டபம் அமைத்தல் ஆகிய முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.

கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டங்களை துரிதமாக அமுல்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வலியுறுத்தினார்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now