New Updates! Fresh news just arrived.

மன்னார் நகர சுற்றுவட்டத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்...

News

மன்னார் நகர சுற்றுவட்டத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

August 7, 2026 1:16 pm
மன்னார் நகர சுற்றுவட்டத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!
நீண்டகாலமாக தமது பூர்வீக காணிகளை மீட்டெடுப்பதற்காக அமைதியான மற்றும் ஜனநாயக வழிகளில் தொடர்ந்து போராடி வரும் மக்களின் நீதியான கோரிக்கைகளுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் நோக்கில், இன்று (07) வெள்ளிக்கிழமை மன்னார் நகர சுற்றுவட்டத்திற்கு முன்பாக ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டம், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாப்புலவு, மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுக்க இடையறாது போராடி வரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வு காணி இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன், MSEDO (Mannar Social and Economic Development Organization) அமைப்பின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமைகள், காணி உரிமைகள், சமூக நீதி மற்றும் ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் பல்வேறு சிவில் சமூக அமைப்புகள், மக்கள் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

குறிப்பாக, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தமது வாழ்வாதாரம், அடையாளம் மற்றும் வரலாற்று மரபுகளுடன் தொடர்புடைய பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் மக்களின் உரிமைக் குரலுடன் மன்னார் மக்களும் இணைந்து நின்றனர். காணி உரிமை என்பது வெறும் சொத்து உரிமை மட்டுமல்ல; அது மனித உரிமை, வாழ்வுரிமை, சமூக நீதி மற்றும் மக்களின் கண்ணியத்துடன் நேரடியாக இணைந்த அடிப்படை உரிமையாகும் என்பதைப் பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.

இந்த அமைதியான ஜனநாயகப் போராட்டம், நிலத்தை இழந்த மக்களின் நீதி, உரிமை, கண்ணியம், பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் வரலாற்று அடையாளம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட ஒரு முக்கியமான சமூக நீதிப் போராட்டமாக அமைந்தது.

இந்தப் போராட்டத்தின் ஊடாக, அரசாங்கம் மக்களின் நீண்டகால காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நீதியான மற்றும் நிலையான தீர்வை வழங்க வேண்டும்; இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் பூர்வீக காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்; இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களில் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் மீளக் குடியமர்வதற்கான நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்; காணி உரிமைகள் தொடர்பான அனைத்து தீர்மானங்களும் மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பன வலியுறுத்தப்பட்டன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now