New Updates! Fresh news just arrived.

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு: வர்த்தக நிலைய பணியா...

News

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு: வர்த்தக நிலைய பணியாளருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

June 6, 2026 3:20 pm
சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு: வர்த்தக நிலைய பணியாளருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!
வீட்டிலிருந்த சிறுமியை விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி செல்லப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான கல்முனை வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றும் 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றமானது உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் வீடொன்றில் கடந்த புதன்கிழமை (03) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மறுநாள் வியாழக்கிழமை(04) இச்சம்பவம் தொடர்பில் முறைப்பாடும் பாதிக்கப்பட்ட சிறுமியினுடைய தரப்பினரால் வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி, குறித்த முறைப்பாட்டிடினை அடுத்து கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தலைமையில் செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி, கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் ஷார்ஜன், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (05) குறித்த வழக்கானது மன்றில் விசாரணைக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை குறித்த சந்தேக நபரான இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;

கல்முனை மாநகரப் பகுதியில் அமைந்திருக்கும் ஆடை விற்பனை நிலையமொன்றில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு குறித்த பாதிக்கப்பட்ட 16 வயது மதிக்கத்தக்க சிறுமி (பாடசாலையை விட்டு இடைவிலகியவர்) தனது தாயாருடன் ஆடை கொள்வனவிற்காக சென்றுள்ள நிலையில் ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞனுக்கும் குறித்த சிறுமிக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டு தொலைபேசி இலக்கம் பரிமாறப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இருவரும் 2 மாதங்களாக சமூக வலைத்தளங்களின் ஊடாக (IMO /WHATAPPS ) தொடர்பிலிருந்துள்ளனர்.இந்நிலையில் தான் குறித்த இளைஞன் கடந்த புதன்கிழமை(03) இரவு 11.30 மணியளவில் வாடகைக்கு மூலம் பெறப்பட்ட வேன் ஒன்றுடன் தான் பணியாற்றுகின்ற ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றும் மற்றுமொரு 56 வயது மதிக்கத்தக்க நபரினையும் வேனின் சாரதியாக அழைத்துக் கொண்டு குறித்த சிறுமி தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு தொலைபேசி ,மூலமாக அழைத்த அவ்விளைஞன் முகவரி ஒன்றை காட்டுமாறு கூறியுள்ளார்.அப்போது வீட்டிலிருந்து வீதிக்கு வந்த குறித்த சிறுமியை சந்தேக நபரான இளைஞன் உடனடியாக செயற்பட்டு சிறுமியினுடைய வாயை பொத்தி வேனில் கடத்தி சென்று அம்பாறை மாவட்டத்திலுள்ள மத்திய முகாம் பிரதேசத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அழைத்து செல்லப்பட்டிருந்த குறித்த சிறுமி பாழடைந்த வர்த்தக் கட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முதலில் சந்தேக நபரான இளைஞன் சிறுமியினை துஸ்பிரயோகம் செய்துள்ளதுடன், பின்னர் மற்றுமொரு சந்தேக நபரான 56 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் சிறுமியினை துஸ்பிரயோகம் செய்து பின்னர் இரு சந்தேக நபர்களும் மாறி மாறி துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி விட்டு அக்கரைப்பற்று பகுதியில் குறித்த சிறுமியை இறுதியாக அழைத்துச் சென்று விட்டுச் சென்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், குறித்த சிறுமி அப்பகுதியினால் வருகை தந்த பேரூந்தின் உதவியோடு, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த விடயங்களினை உரிய பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் வாக்குமூலத்தை பெற்ற பொலிஸார் உடனடியாக செயற்பட்டு சந்தேக நபரான குறித்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்ததோடு, தலைமறைவாகியுள்ள மற்றைய சந்தேக நபரான 2 பிள்ளைகளினுடைய தந்தையான 56 வயது மதிக்கததக்க சந்தேக நபரினை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி கல்முனையிலுள்ள வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சிறுமியை கடத்தி செல்ல உதவிய வேன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now