New Updates! Fresh news just arrived.

குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை ஜ...

News

குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

April 6, 2026 10:36 pm
குடிசன வீட்டு வசதிகள்  தொகை மதிப்பு  2024 இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி அறிக்கையை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.டி.எஸ்.டி. கருணாரத்ன, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இந்தத் தொகை மதிப்பு இலங்கையின் 15 ஆவது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பாகும் . தேசிய அளவிலான தரவுச் சேகரிப்பிற்காக முதல்முறையாக டெப்லெட் கணினிகள் மற்றும் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டமை இதன் விசேட அம்சமாகும். அதன்படி, 15,000 டெப்லெட் கணினிகள் மற்றும் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தித் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இதன் மூலம் தரவுச் சேகரிப்பை விரைவுபடுத்தவும், பிழைகளைக் குறைக்கவும், பெறப்பட்ட தரவுகளை நேரடியாகத் திணைக்களத்தின் சேர்வர் கணினிகளுக்குப் பதிவேற்றவும் முடிந்தது.

அதனைத் தொடர்ந்து தரவுப் பகுப்பாய்வு மற்றும் அறிக்கை தயாரிப்புப் பணிகள் வினைத்திறனாக மேற்கொள்ளப்பட்டன.
இலங்கையில் அரச நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான தரவுச் சேகரிப்புச் செயற்பாடான இந்தத் தேசிய தொகை மதிப்பு , தொகை மதிப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினுடைய தொழில்நுட்ப வழிகாட்டலில், மாவட்ட நிர்வாகத்தின் மேற் பார்வையில், நாட்டின் அனைத்துப் பகுதிகளினையும் பிரதிநிதித்துவப்படுத்தி அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், உயர்கல்வி பயில்வோர் உள்ளிட்ட விசேட பயிற்சி பெற்ற பெருமளவிலானோர் குறித்த பணியில் இணைந்துகொண்டனர். குறித்த தொகை மதிப்பு 'தொகைமதிப்புத் தருணமாக' 2024 டிசம்பர் 19-ஆம் திகதி நள்ளிரவு (00:00 மணி) கருதப்பட்டது.

இலங்கையின் சனத் தொகை, அதன் வளர்ச்சி, மாவட்ட ரீதியான மக்கள் பரம்பல் மற்றும் மக்கள் வசிக்கும் வீட்டு அலகுகள் குறித்த விபரங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும், நாட்டின் மக்கள் தொகைக் கட்டமைப்பு, வீடமைப்பு நிலைமை, சமூக-பொருளாதாரப் பண்புகள் மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் குறித்த விரிவான தரவுகளை வழங்கும் அடிப்படைத் தேசிய ஆவணமாக இது கருதப்படுகிறது. இந்தத் தரவுகள் இலங்கையின் அபிவிருத்திச் செயல்முறைக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்க அரசாங்கத்திற்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் மிகவும் அவசியமானவை.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.டி.எஸ்.டி. கருணாரத்ன கருத்துத் தெரிவிக்கையில், டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தியதன் காரணமாக முன்னைய தொகை மதிப்புகளை விடவும் பரந்த அளவிலான தகவல்களைச் சேகரிக்க முடிந்ததாகக் குறிப்பிட்டார்.

இதன் ஊடாக மிகவும் விரிவான பகுப்பாய்வு கொண்ட அறிக்கையினை தயாரிக்க முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, திறைசேரியின் மேலதிக செயலாளர் ஹிமாலி புள்ளேபெரும, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் வாசனா ஜயகொடி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now