New Updates! Fresh news just arrived.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்: 13 பேர் கவலைக்...

News

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்: 13 பேர் கவலைக்கிடம் - சிறைக் கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை!

July 6, 2026 3:26 pm
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்: 13 பேர் கவலைக்கிடம் - சிறைக் கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை!
இன்று (06) காலை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த மோதலின் காரணமாக இதுவரை உயிரிழந்த 25 பேரில், சிறைச்சாலை அதிகாரிகள் 5 பேரும், 20 கைதிகளும் அடங்குவதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையினுடைய பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் புஷ்பா கம்லத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த மோதலின் காரணமாக சுமார் 100 பேர் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் பலத்த காயமடைந்த 13 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று காலை மீண்டும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், கைதிகள் சிறையினுடைய பிரதான வாயிலூடாக வெளியேற முயற்சித்திருந்தனர். இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரோடு விசேட அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டிருந்த நிலையில் சிறைக்குள் இருந்து சில துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை 10 மணி அளவில் ஏற்பட்ட குறித்த பதற்றமான சூழலினை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினர் பெரும் சிரமப்பட்ட நிலையில், காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் சிலரினை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு, பாதுகாப்புப் படையினர் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைந்திருந்தனர்.

இந்நிலையில், சிறைச்சாலைக்குள் நிலவிய குறித்த பதற்றமான சூழலினை அவதானிப்பதற்கு விமானப்படையின் இரண்டு ட்ரோன் கருவிகளும் மற்றும் பெல் 412 (Bell 412) ரக ஹெலிகொப்டர் ஒன்றும் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் விமானப்படையானது தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த சிறையின் பாதுகாப்பு நிலைமையினை உறுதிப்படுத்த மேலதிக இராணுவ வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு, குறித்த சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலரை உடனடியாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now