New Updates! Fresh news just arrived.

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்கு நம்பிக்கை ...

News

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்கு நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்க இணக்கப்பாடு!

July 27, 2026 7:30 pm
திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்கு நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்க இணக்கப்பாடு!
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, 'கூட்டு முகாமைத்துவக் குழு' கூட்டத்தில் இன்று (27) திங்கட்கிழமை எட்டப்பட்டுள்ளது.

இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டத்தில் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் பல்வேறு இடங்களிலிருந்தவாறு கலந்துகொண்டனர்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ; ஜா ஆகியோரும், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திலிருந்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோரும் இணைந்திருந்தனர். அத்துடன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்திலிருந்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் கௌரவ மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராசா மற்றும் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையானது பதவி வழி உறுப்பினர்கள் 3 பேரும், துறைசார் உறுப்பினர்கள் 4 பேருமாக மொத்தம் 7 பேர் கொண்டதாக அமைக்கப்படுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், இக்கூட்டத்தில் பதவி வழி உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாகாண உள்ளூராட்சிக்குப் பொறுப்பான அமைச்சர் (மாகாண சபை இல்லாத சந்தர்ப்பத்தில் கௌரவ ஆளுநர்), புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், யாழ். மாநகர சபையின் கௌரவ மேயர், யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகிய 4 பதவி வழி உறுப்பினர்களும், துறைரீதியான 5 உறுப்பினர்களுமாக மொத்தம் 9 பேர் இச்சபைக்கு நியமிக்கப்படவுள்ளனர். துறைரீதியாக 5 பேரையும் பெயர் குறித்து நியமிப்பதற்கும் யாழ். மாநகர சபை உட்பட அனைத்துத் தரப்புக்களும் இக்கூட்டத்தில் இணக்கம் தெரிவித்தன.

மேலும், யாழ். மாநகர சபையால் சுட்டிக்காட்டப்பட்ட, ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த நம்பிக்கை நிதியப் பொறுப்பு உடன்படிக்கையிலுள்ள 12ஆவது சரத்தை நீக்குவதற்கும் அனைத்துத் தரப்புக்களும் இணக்கம் வெளியிட்டன.

இந்தச் சுமூகமான இணக்கப்பாடுகளையடுத்து, திருத்தப்பட்ட உடன்படிக்கையில் அனைத்துத் தரப்புக்களும் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திடுவதற்கான திகதியை மிக விரைவில் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now