New Updates! Fresh news just arrived.

2025 இல் 110 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமு...

News

2025 இல் 110 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்: பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்!

February 21, 2026 7:06 pm
2025 இல் 110 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்: பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்!
கடந்த 2025 ஆம் ஆண்டில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் மூலம் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 110 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமென தம்புள்ளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையே 147 பில்லியன் ரூபாவாகும் என அவர் சுட்டிக்காட்டினார். இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களால் நாட்டுக்குப் பெருமளவு பணம் இழக்கப்படுவதாகவும், இந்த வருமானம் நாட்டின் அபிவிருத்திக்கோ அல்லது எதிர்காலப் பயணத்திற்கோ எவ்விதத்திலும் பங்களிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டைச் சூழ்ந்துள்ள இந்தப் பயங்கரமான போதைப்பொருள் ஆபத்தில் இருந்து சமூகத்தையும் குழந்தைகளையும் பாதுகாப்பது அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பாகும் என அவர் வலியுறுத்தினார். இதன் காரணமாக நாட்டின் பல இளம் உயிர்கள் அகால மரணமடைந்து நாட்டுக்கு இழக்கப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ரவி செனவிரத்ன:

"நமது நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு பயங்கரமான ஆபத்து உள்ளது. அதுதான் போதைப்பொருள். 2025 இல் பொலிஸாரும் இராணுவமும் கைப்பற்றியுள்ள போதைப்பொருட்களின் நிதிப் பெறுமதி 110 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும். அத்துடன் நான் உங்களுக்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும், 2025 ஆம் ஆண்டில் நான் சேவை செய்யும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் நிறுவனங்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகையே 147 பில்லியன் ரூபாவாகும். எனவே, ஏறக்குறைய அதே அளவிலான பணம் இந்த போதைப்பொருள் காரணமாக நமது நாட்டுக்கு இழக்கப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இந்த 110 பில்லியன் ரூபாவும் இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றதே தவிர, இது நாட்டின் அபிவிருத்திக்கோ, நாட்டின் எதிர்காலப் பயணத்திற்கோ பங்களிக்கக்கூடிய ஒன்றல்ல. எனவே, இந்த போதைப்பொருள் அரக்கனிடமிருந்து உங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்."
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now