New Updates! Fresh news just arrived.

இ-விசா சர்ச்சை: உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வெளியிட...

News

இ-விசா சர்ச்சை: உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

July 10, 2026 3:50 pm
இ-விசா சர்ச்சை: உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
கடந்த அரசாங்கக் காலத்தில் மின்னணு விசா (e-Visa) வழங்கும் பணிகளை தனியார் நிறுவனங்களுக்குப் பௌதீக ரீதியாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் சட்டப்பூர்வ தன்மை குறித்து மறுபரிசீலனை செய்ய தற்போதைய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (10) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கக் காலத்தில் மின்னணு விசா வழங்கும் செயல்முறையைத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு அப்போதைய அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன இந்த அறிவிப்பை விடுத்தார்.

தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், இந்த மின்னணு விசா வழங்கும் செயல்முறை தொடர்பாகத் தனியார் நிறுவனங்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் சட்டப்பூர்வ தன்மையை ஆராய்வதற்காக தற்போதைய அமைச்சரவையினால் ஒரு துணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அக்குழு இது தொடர்பான விபரங்களை ஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிட்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், அந்தப் பணிகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காக மற்றொரு திகதியை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதன்போது, மனுதாரர்களில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், இந்த கொடுக்கல் வாங்கலை ரத்து செய்ய தற்போதைய அரசாங்கம் தீர்மானித்திருந்தாலும், இந்த மனுவை முன்னோக்கி எடுத்துச் செல்ல தாங்கள் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், தற்போதைய அமைச்சரவையின் உறுப்பினர்கள் இந்த மனுவில் எதிர்மனுதாரர்களாகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி இங்கு சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு அழைப்பாணை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் தரப்பிற்கு உத்தரவிட்ட நீதியரசர்கள் குழாம், இந்த மனுவை மீண்டும் வரும் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதிக்கு அழைக்குமாறு உத்தரவிட்டது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now