New Updates! Fresh news just arrived.

பலாலி காணி விடுவிப்பு கடந்தகால இணக்கப்பாடுகளை நிறைவேற்ற அ...

News

பலாலி காணி விடுவிப்பு கடந்தகால இணக்கப்பாடுகளை நிறைவேற்ற அனுர அரசுக்கு ஈ.பி.டி.பி வலியுறுத்தல்!

July 12, 2026 2:36 pm
பலாலி காணி விடுவிப்பு கடந்தகால இணக்கப்பாடுகளை நிறைவேற்ற அனுர அரசுக்கு ஈ.பி.டி.பி வலியுறுத்தல்!
ஜனாதிபதி அனுர தலைமையிலான அரசாங்கம், தனது இயலாமையை மறைக்காமல், காணி விடுவிப்பு தொடர்பில் கடந்தகால அரசாங்கங்களினால் எடுக்கப்பட்ட முடிவுகளையும், கொள்கை ரீதியாக ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடுகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

​பலாலி மக்கள் தமக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்கக் கோரி இன்று (13) முன்னெடுத்த தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) கலந்துகொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

​குறித்த போராட்டக் களத்தில் இருந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஈ.பி.டி.பி கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து தனது விசனத்தை சுட்டிக்காட்டி மேலும் கூறுகையில் -

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை தற்போதைய அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக மானசீகமாக உழைக்க கூடிய யாரும் அரசாங்க பிரதிநிதிகள் யாரும் இல்லாத சூழலில் இவ்வாறான போராட்டங்களுடாக மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதேநேரம் கடந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தையாவது தற்போதைய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இதன்படி பலாலி வீதிக்குக் கிழக்கு பக்கம் அமைந்திருக்கும் அனைத்துக் காணிகளினையும் விடுவிக்க வேண்டும் என்கின்ற ரணில் அரசாங்கத்தின் தீர்மானத்தினை, அல்லது எட்டப்பட்ட கொள்கை ரீதியான இணக்கப்பாட்டினை தற்போதைய அரசாங்கம் எந்தவித நிபந்தனையுமின்றி நிறைவேற்ற வேண்டும்.

​அதற்காகவே பலாலி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கும், வாழ்விடத்திற்குமான நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி சாத்வீக முறையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த மக்களினுடைய போராட்டத்திற்குத் தார்மீக ரீதியான முழுமையான ஆதரவினை தொடர்ந்தும் ஈ.பி.டி.பி வழங்கும்.

இதேநேரம் தற்போதைய அரசாங்கம், கடந்த கால அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினையே முன்கொண்டு செல்கிறது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், வெளியுறவுக் கொள்கை போன்வற்றை தொடர்கிற தற்போதைய அரசாங்கம், எமது மக்களின் அபிலாசைகள் தொடர்பாக முன்னெடுத்த தீர்மானங்களை கிடப்பில் போடுவது வேதனையளிக்கிறது. இது இந்த அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை புலப்படுத்துகிறது என்று தெரிவித்தூள்ளார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now