New Updates! Fresh news just arrived.

முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து: உரிமை...

News

முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து: உரிமையாளர் கைது!

June 4, 2026 3:35 pm
முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து: உரிமையாளர் கைது!
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், குறித்த தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தற்போது கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த நிலையில் 6 பேர் தற்போது ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும், தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த இல்லத்திற்குள் சுமார் 72 பேர் வரை இருந்துள்ளனர். அவர்களில் 51 பேர் எவ்வித ஆபத்துகளுமின்றி தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

'மவ்பிய செவன செநெஹஸே கெடெல்ல' என்ற பெயரில் தனியார் நிறுவனமாக நடத்தப்பட்டு வந்த இந்த மையத்தில், முதியவர்களுடன் மனநலக் குறைபாடுடைய நபர்களும் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (03) பிற்பகல் ஏற்பட்ட இந்தத் திடீர் தீ விபத்தினால் இல்லத்தின் பெரும்பகுதி முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், பலத்த சேதமும் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தின் கொடூரத்தினால் இல்லத்தில் இருந்த சிலர் தீயில் கருகியுள்ளனர். அவ்வாறு தீயில் கருகிய 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று (04) காலை நடத்தப்பட்டதை அடுத்து, சடலங்களை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாகவே, பராமரிப்பு நிலையத்தின் தரம், பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அலட்சியப்போக்கு குறித்து விசாரிப்பதற்காக அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now