New Updates! Fresh news just arrived.

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சட்டத்தரணி குறித்த அதிரடித் ...

News

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சட்டத்தரணி குறித்த அதிரடித் தகவல்கள்!

February 5, 2026 7:04 pm
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சட்டத்தரணி குறித்த அதிரடித் தகவல்கள்!
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்திற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி தமரா குமாரி அபேரத்ன தொடர்பில் புதிய தகவல்களினை குற்றப் புலனாய்வுத் திணைக்களமானது இன்று (05) நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

இதன்படி, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தத் தகவல்களினை வழங்கியது.

குறித்த சட்டத்தரணி கைது செய்யப்பட்டபோது பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட சுமார் இரண்டரை கோடி ரூபா (2.5 கோடி) பெறுமதியான ஹோண்டா வெசல் ரக கார் மற்றுமொருவரினுடைய பெயரில் இருந்தபோதிலும், அது குறித்த சட்டத்தரணிக்கே சொந்தமானது என்று விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

வில்பிரட் திசாநாயக்க என்பவரினுடைய பெயரில் குறித்த வாகனம் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், அவர் வழங்கிய வாக்குமூலத்தின்படி, குறித்த சட்டத்தரணியே தனது சொந்தப் பணத்தின் மூலம் குறித்த வாகனத்தினை வாங்கியுள்ளார். இதற்கான பணம் எவ்வாறு திரட்டப்பட்டது என்பது தொடர்பில், அவரது வங்கிக் கணக்குகளில் இடம்பெற்ற பாரிய பணப் பரிமாற்றங்கள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளினை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கொலைச் சம்பவத்தினை செய்ததாகக் கூறப்படுகின்ற துப்பாக்கிதாரிக்கு, குறித்த சட்டத்தரணியால் அவர்களுக்கு தேவையான 2 கழுத்துப் பட்டிகள், சட்டத்தரணிகளினுடைய வாகனங்களில் பயன்படுத்தப்படும் இலச்சினை பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர், தண்டனைச் சட்டக்கோவை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை ஆகிய சட்டப் புத்தகங்கள் மற்றும் போலி சட்டத்தரணி அடையாள அட்டை ஒன்றினை தயாரிப்பதற்குத் தேவையான புகைப்படங்கள் ஆகிய பொருட்களினை வழங்கியுள்ளமை விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

மேலும்,குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளினைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now