New Updates! Fresh news just arrived.

பூகோள அரசியல் - இந்தியாவின் நலனை வலியுறுத்தி தீவகத்தில் ச...

News

பூகோள அரசியல் - இந்தியாவின் நலனை வலியுறுத்தி தீவகத்தில் சீன நிறுவன வருகையை தடுத்தவர் டக்ளஸ்: ஸ்ரீகாந்த் சுட்டிக்காட்டு!

July 2, 2026 10:40 am
பூகோள அரசியல் - இந்தியாவின் நலனை வலியுறுத்தி தீவகத்தில் சீன நிறுவன வருகையை தடுத்தவர் டக்ளஸ்: ஸ்ரீகாந்த் சுட்டிக்காட்டு!
பூகோள அரசியலில் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும் வகையிலான திட்டங்களை இடமளிக்க கூடாது என்ற டக்ளஸ் தேவானந்தாவின் உறுதியான நிலைப்பாடு பெடுந்தீவில் பரிணமிக்கும் கலப்புமுறை மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், தீவகத்தின் இருப்பை பாதுகாப்பதற்கும் வாழ்வியலை மேம்படுத்துவதற்கும் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்களுள் மிகவும் அற்புதமான – பெயர் சொல்லக்கூடிய திட்டமாக இந்த மீள் புதுப்பிக்கத்தக்க கலப்பு முறை மின்சார உற்பத்தி திட்டம் அமைந்துள்ளதாகவும் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் நிதியுதவியில், நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் குறித்த மின் உற்பத்தி திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், நெடுந்தீவில் முன்னெடுக்கபட்டு வருகின்ற கட்டுமாணப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் கருத்து வெளியிடும்போதே, ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளரினால் குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் -

நெடுந்தீவின் வளர்ச்சியில் தொடர்ந்தும் தீவிர கவனம் செலுத்தி வருகின்ற ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அன்று மின்சாரம் இன்றி இருண்டு கிடந்த நெடுந்தீவிற்கு ஒளியூட்டும் நோக்கோடு 1996 ஆண்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மின்பிறப்பாக்கி ஒன்றினை எடுத்துச் சென்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மின்சாரப் பாவனையை ஆரம்பித்து வைத்தார்.

பின்னர் 2001 ஆண்டு புனர்வாழ்வு அமைச்சராக இருந்த காலத்தில் மின்சார சபை மூலம் பாரிய மின்பிறப்பாக்கியை பொருத்தி தொடர்ச்சியான மின் விநியோகத்தினை உறுதிப்படுத்தினார்.

எனினும், மின்பிறப்பாக்கியை செயற்படுத்துவதற்கான எரிபொருள் கடல் வழியாக எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதால், மின் உற்பத்திச் செலவு அதிகமா இருந்துவந்த நிலையில், கடந்த அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக பணியாற்றிய டக்ளஸ் தேவானந்தா , தீவகத்திற்கு குறைந்த விலையில் நிலையான மின்சார விநியோத்தை உறுதிப்படுத்தும் வகையில் பாரிய வேலைத் திட்டம் வடிவமைக்கப்பட்டது.

குறித்த திட்டத்தினை அரச – தனியார் கூட்டு முதலீட்டில் அமைப்பதற்கு தீர்மானித்த கடந்த கால அரசாங்கம், தனியாருக்கான விலைமனுக் கோரலை வெளியிட்டிருந்தது.

அதனடிப்படையில், சீனாவை தளமாக கொண்ட தனியார் நிறுவனத்திற்கு குறித்த திட்டத்தினை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது.

குறித்த விடயம் தொடர்பாக அமைச்சரவையில் பிரஸ்தாபித்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் பூகோள அரசியல் விவகாரம் இருக்கின்ற நிலையில், தீவகத்தில் சீன நிறுவனத்திற்கு குறித்த வேலைத் திட்டத்தினை முன்னெடுப்பதற்கான வாய்ப்பினை வழங்குவது, இந்தியாவின் நலனுக்கு பாதகமாக அமைந்து விடும் என்ற கருத்தினை முன்வைத்த நிலையில் குறித்த தீர்மானம் இரத்து செய்யப்பட்டது.

அதேவேளை, தீவகத்தில் முன்னெடுக்க திட்டமிட்ட மீள்புதுப்பிக்கத்தக்க கலப்பு முறை மின்சார உற்பத்தி திட்டத்திற்கு முழுமையான நிதியுதவி வழங்கி அதனை அமைத்து தருவதற்கு இந்திய அரசாங்கம் சம்மதம் தெரிவித்தது.

அதனடிப்படையில், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமாணப் பணிகள் தற்போது நிறைவு கட்டத்தினை அடைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது' எனவும் தெரிவிக்கப்பட்டது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now