New Updates! Fresh news just arrived.

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரச...

News

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் முன்வர வேண்டு: ரிஷாட் பதியுதீன்!

June 12, 2026 3:15 pm
ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் முன்வர வேண்டு: ரிஷாட்  பதியுதீன்!
சில்லறை அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க, நீதியானதும் சுதந்திரமானதுமான விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் முன்வர வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன், ஈஸ்டர் குண்டு தாக்குதல்களில் உயிரிழந்த,பாதிக்கப்பட்ட மற்றும் சிறைகளில் வாடுகின்ற மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். தமது உரையில் ரிஷாட் பதியுதீன் தெரிவித்ததாவது;

அரசியல் தேவைகளுக்காக இனவாதத்தை தூண்டுவது, சமூகங்களிடையே மோதல்களை ஏற்படுத்துவது மற்றும் திட்டமிட்ட கொலை கலாசாரங்களை கட்டவிழ்ப்பது, நிறுத்தப்பட வேண்டும். அரசியலுக்காக மாத்திரமல்ல குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கும் இவ்வாறான யுக்திகள் கையாளப்படுவது வேதனை அளிக்கிறது. கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாகியுள்ள சுரேஷ் சலேவை காப்பாற்றுவதற்கும் சில இனவாதிகள் மத வேறுபாடுகளை தோற்றுவிக்கின்றனர்.

இவர்களின் கூடாரங்களுக்குள் விமல் வீரவன்ச உதயகம்மன்பில போன்ற சமூக நிந்தனையாளர்கள் ஒன்று சேர்ந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. இவர்களின் சில்லறை அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் அடி பணியக் கூடாது. சுரேஷ் சாலே குற்றவாளி இல்லை என்பதை, நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். நீதிமன்றங்கள் தீர்மானிக்க வேண்டியதை, இனவாத அழுத்தங்கள் தீர்மானிக்க முடியாது. விஷமிகளின் விஷ்வரூபங்கள் எந்த வடிவில் வந்தாலும் அரசாங்கம் அடிபணியக் கூடாது.

ஈஸ்டர் தாக்குதல்களில் கத்தோலிக்க சமூகம் பாதிக்கப்பட்டதை போல், முஸ்லிம் சமூகமும் பெரும் நெருக்கடிக்குள்ளானது. முஸ்லிம் சமூக அடையாளங்கள் அத்தனையும் சந்தேகக் கண்கொண்டு நோக்கப்பட்டன. கல்விமான்கள், கனவான்கள், சமூக முன்னோடிகள் இலக்கியவாதிகள் மற்றும் உலமாக்கள் எனப் பலரும் சிறையிலடைக்கப்பட்டனர். கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால், சுரேஷ் சலேவுக்காக ஒன்று கூடிய ஒரு சிலர் மத்தியில் உரையாற்றிய பௌத்த தேரர் ஒருவர்,சுரேஸ்சலே முஸ்லிம் என்பதற்காக குரல் கொடுப்பதாக கூறினார்.

அவ்வாறானால், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைதான போனது, கவிதை ஒன்றை எழுதியமைக்காக முஸ்லிம் இளைஞன் கைதான போது ஏன் இந்தத் தேரர், இவர்களுக்காக பேசவில்லை. இரண்டரை வருடங்களாக சிறையிலிருந்து இவர்கள் அனுபவித்த இன்னல்கள் பற்றி ஏன்,கூறவில்லை. குருநாகலையில் ஆர்ப்பாட்டமாகச் சென்ற இனவாதக் கூட்டம், நான்கு முஸ்லிம் பிள்ளைகளின் தந்தையை அசிட் வீசிக் கொன்றது. இவற்றுக்கெல்லாம் குரல் கொடுக்காத இந்த இனவாத கூட்டம் இரண்டு மாதங்கள் சிறையிலிருக்கும் சுரேஷ் சலேலவுக்கு குரல் கொடுப்பது ஏன்?

எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை இரண்டு தடவைகள் சிறையில் அடைத்தார்கள். அவர் விடுதலையான பின்னருங்கூட அவரை மீண்டும் கைது செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் 150 பேர் ஒப்பமிட்டு கோரிக்கை விடுத்தனர். நள்ளிரவில் எனது வீட்டைச் சுற்றி வளைத்த பொலிஸ் பட்டாளம் என்னைத் தூக்கிச் சென்று சிறையில் அடைத்தது. நான்,சிறையிலடைக்கப்பட்ட மறுநாளன்று எனது மகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை எழுத வேண்டியிருந்தது. எந்த மனநிலையில் எனது மகள் இந்த பரீட்சையை எழுதியிருப்பார். இத்தனை சங்கடங்களையும் சமாளித்துக் கொண்டு, நாங்கள் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை பொறுமையாக இருந்தோம். இவ்வாறு பொறுமையாக இருக்க சுரேஷ் சலேவுக்கு ஏன் முடியாமல் உள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now