New Updates! Fresh news just arrived.

வாகன விலைகள் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிரடித் தக...

News

வாகன விலைகள் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிரடித் தகவல்

February 17, 2026 9:16 am
வாகன விலைகள் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிரடித் தகவல்
வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள், விற்பனையாளர்களால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தக் கையாளப்படும் ஒரு தந்திரோபாயம் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் புதிய வரி எதனையும் அறிமுகப்படுத்தவில்லை என்றும், சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) வசூலிக்கப்படும் முறையை மாத்திரமே மாற்றியமைத்துள்ளதாகவும் விளக்கமளித்தார்.

அத்துடன் இதுவரை சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியானது வாகனம் விற்பனை செய்யப்படும் புள்ளியிலேயே வசூலிக்கப்பட்டது.

ஆனால், தற்போது புதிய நடைமுறையின் கீழ் அந்த வரி வாகனம் இறக்குமதி செய்யப்படும் போதே சுங்கத்தில் (Customs) வசூலிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

"உதாரணமாக, ஒரு வாகனம் 100 மில்லியன் ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டு, அதன் பெறுமதி கூட்டப்பட்டு 200 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். பழைய நடைமுறையின்படி, விற்பனையாளர் அந்த 200 மில்லியன் ரூபாய்க்கு 2.5% வரியைச் சேர்த்து அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டும். ஆனால், பல சந்தர்ப்பங்களில் இந்த வரி முறையாகச் செலுத்தப்படுவதில்லை. இவ்வாறான முறைகேடுகளைத் தவிர்க்கவே, தற்போது இறக்குமதியின் போதே (100 மில்லியன் ரூபாய்க்கு) இந்த 2.5% வரியை வசூலிக்கத் தீர்மானித்துள்ளோம்." என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தநிலையில் புதிய நடைமுறையினால் வாகனங்களின் விலை அதிகரிக்காது, மாறாகக் குறையவே வாய்ப்புள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முன்பு 200 மில்லியன் ரூபாய்க்கு (விற்பனை விலை) கணக்கிடப்பட்ட வரி, தற்போது 100 மில்லியன் ரூபாய்க்கு (இறக்குமதி விலை) மட்டுமே கணக்கிடப்படுவதால் வரியின் அளவு குறைகிறது.

வரி செலுத்தாமல் தப்பிக்க முயன்றவர்களே இம்மாற்றத்தை எதிர்க்கின்றனர்.

எனவே, விற்பனையாளர்களின் இத்தகைய அடிப்படையற்ற கருத்துக்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

இது ஒரு கூடுதல் வரி அல்ல என்பதைத் தெளிவுப்படுத்திய அவர், உண்மையான தரவுகளை அறிந்து செயற்படுமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now