New Updates! Fresh news just arrived.

வடக்கில் கூட்டுறவு இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கு ...

News

வடக்கில் கூட்டுறவு இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கு அரசின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்: ஆளுநர் உறுதி!

August 8, 2026 2:43 pm
வடக்கில் கூட்டுறவு இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கு அரசின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்: ஆளுநர் உறுதி!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கூட்டுறவுத்துறையைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதுடன், கூட்டுறவுச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சாதகமான சூழலை வடக்கு மாகாணம் முழுமையாகப் பயன்படுத்தி, கடந்த காலப் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் கூட்டுறவுத்துறையை மீளெழுச்சியடையச் செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு மாநாடு இன்று (08.08.2026) சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில், வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், 1970 மற்றும் 1980களில் வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுத்துறை நாட்டிலேயே முன்னணி நிலையில் விளங்கியதாகவும், பின்னர் ஏற்பட்ட போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அது பெரும் பின்னடைவைச் சந்தித்ததாகவும் குறிப்பிட்டார். தற்போது கூட்டுறவுத்துறையை தேசிய பொருளாதார வளர்ச்சியின் முக்கியத் தூணாக மாற்ற அரசாங்கம் உறுதியான கொள்கையுடன் செயல்பட்டு வருவதாகவும், இது வடக்கு மாகாணத்திற்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தினுடைய கூட்டுறவு இயக்கத்தினை மீண்டும் வலுப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பும் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்ட ஆளுநர், கூட்டுறவு நிறுவனங்கள் தமது செயற்பாடுகளினை விரிவுபடுத்தி, உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் அதிக பங்காற்ற வேண்டிய காலம் இதுவே என தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு இன்று உலகளாவிய சவாலாக மாறியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், காலநிலை மாற்றம், போர்கள் மற்றும் உலக பொருளாதார மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணிகள் உணவுப் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டினார். இந்தச் சவால்களுக்கு கூட்டுறவுத்துறை ஊடாக நிலையான தீர்வுகளை உருவாக்கும் நோக்கில், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கி கடந்த மூன்று நாட்களாக முன்னெடுத்துள்ள களப்பயணங்களும், பயிற்சிகளும் கலந்துரையாடல்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் இந்த முறை சிறுபோக நெல் விளைச்சல் நூறு சதவீத இலக்கினைத் தாண்டியுள்ளதாக மகிழ்ச்சி வெளியிட்ட ஆளுநர், நவீன விவசாய முறைகளினை பயன்படுத்தியமை இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.

எனினும், விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் இன்னமும் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாகவும், தனியார் வியாபாரிகள் குறைந்த விலையில் நெல்லைக் கொள்வனவு செய்தாலும், அரிசியின் சில்லறை விலை குறையாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனால் விவசாயிகளும் நுகர்வோரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுகின்றனர் என்றும், இடைத்தரகர்களே அதிக இலாபம் பெறுகின்றனர் என்றும் குறிப்பிட்ட அவர், இந்த நிலையை மாற்றி, உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் நியாயமான சந்தையை உருவாக்கும் வல்லமை கூட்டுறவுத்துறைக்கு மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், கூட்டுறவு இயக்கம் தனது உண்மையான பொருளாதார ஆற்றலை இன்னும் முழுமையாக உணராத நிலை காணப்படுவதாகவும், அந்த நிலையை மாற்றியமைப்பதற்காக பல்வேறு நடைமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாணவர் உணவுத் திட்டத்துடன் கூட்டுறவுச் சங்கங்களை இணைக்கும் சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக ஆளுநர் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் நிறுவப்பட்டு தற்போது செயலிழந்துள்ள தொழிற்சாலைகளினை மீளச் செயற்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவை விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

கூட்டுறவுச் சங்கங்கள் தமது உற்பத்திகளை உள்நாட்டு சந்தைக்கு மட்டுப்படுத்தாமல், நேரடி ஏற்றுமதிக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், எதிர்காலத்தில் அந்த இலக்கையும் எட்ட முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர், மாண்புமிகு ஜனாதிபதி நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை ஏழு சதவீதமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அதேவேளை, வடக்கு மாகாணத்தின் தேசிய உற்பத்திக்கான பங்களிப்பை தற்போதைய 4.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை வடக்கு மாகாண ஆளுநர் நிர்ணயித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்த இலக்கை அடைவதற்காக வடக்கு மாகாணத்தில் அதிக பங்களிப்பை வழங்கக்கூடிய ஏழு முக்கிய பொருளாதாரத் துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் கூட்டுறவுத்துறையுடன் நேரடியாகத் தொடர்புடையவை என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதன் ஊடாக மாகாணத்தின் தேசிய உற்பத்திக்கான பங்களிப்பை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், கூட்டுறவு நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் கூட்டுறவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now