New Updates! Fresh news just arrived.

அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுங்கள்: சவூதி அதிகாரிகளிட...

News

அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுங்கள்: சவூதி அதிகாரிகளிடம் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை!

September 19, 2026 12:18 am
அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுங்கள்: சவூதி அதிகாரிகளிடம் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை!
சமூக ஊடகத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் அவமதிப்பான கருத்து தொடர்பான வழக்கில், ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

அனோஜனுக்கு கருணை காட்டி, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபிய அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றும், நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ எழுத்துமூலத் தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் இறையாண்மையையும் அதன் சட்ட முறைமையையும் மதிப்பது என்பது, அளவுக்கு மீறிய தண்டனை தொடர்பில் மௌனமாக இருப்பதைக் குறிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவமதிப்பான சமூக ஊடகக் கருத்துக்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படுவது கூட அதிகப்படியான தண்டனையாகும் எனக் குறிப்பிட்ட அலி சப்ரி, அதே செயலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டால் அது “மிகவும் அளவுக்கு மீறியதும், மனிதாபிமானமற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

அனோஜன் குறித்த கருத்தை சில நிமிடங்களிலேயே நீக்கியதாகவும், பின்னர் பகிரங்கமாக காணொளி மூலம் மன்னிப்புக் கோரியதாகவும் வெளியாகியுள்ள தகவல்களையும் தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

“ஒரு தவறான கருத்து, ஒருவர் மனம் திருந்தி, தனது தவறிலிருந்து கற்றுக்கொண்டு, வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை பறித்துவிடக் கூடாது.”

தாம் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில், மனிதர்களின் தவறுகளுக்கு பதிலளிக்கும் போது கருணையும் இரக்கமும் முக்கியமானவை என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஒருவரின் நம்பிக்கை மற்றும் மனப்பூர்வமான நிலை குறித்து இறுதித் தீர்ப்பை வழங்குவது இறைவனுக்கே உரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனோஜனுக்கு பயனுள்ள சட்ட உதவியை உடனடியாக உறுதி செய்வதுடன், உயர்மட்டத்தில் அவசர இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“கருணை காட்டி சவூதி அதிகாரிகள் அனோஜனுக்கு மன்னிப்பை வழங்க வேண்டும் என்று மரியாதையோடு, கேட்டுக்கொள்கிறேன். நீதியில் கருணைக்கும் இடம் இருக்க வேண்டும். அனோஜன் தனது குடும்பத்திடம் திரும்பி, தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும்” என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

குறிப்பு - அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல், இலங்கை அதிகாரிகளால் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உத்தியோகபூர்வ எழுத்துமூலத் தீர்ப்பு கிடைக்கும் வரை இந்த விடயம் உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே உள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now