New Updates! Fresh news just arrived.

சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கை அழுத்தங்கள் இன்றி...

News

சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கை அழுத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட வேண்டும்: ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிப்பு!

July 28, 2026 10:39 pm
சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கை அழுத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட வேண்டும்: ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிப்பு!
வடக்கு மாகாண சுகாதாரத் துறையினுடைய எதிர்கால சேவைத் தரத்தினை நிர்ணயிக்கும் சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வோடு நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகும், என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுகாதார உதவியாளர் நியமனத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று (28) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது குழு உறுப்பினர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அதிகாரிகளுக்குத் தொடர்ந்தும் அறிவுறுத்தல்களினை வழங்கிய ஆளுநர் மேலும் குறிப்பிட்டதாவது:

2019ஆம் ஆண்டில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டும் கடமையைப் பொறுப்பேற்க அனுமதிக்கப்படாத சுகாதார உதவியாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்தப் பின்னனியையும், பொதுமக்களின் தீவிர அவதானிப்பிலும் இந்த விடயம் இருப்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

300 வெற்றிடங்களுக்காக சுமார் 3,550 விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் எழுத்துப் பரீட்சை எதுவும் இடம்பெறவில்லை என்பதால், நேர்முகத் தேர்வில் வழங்கப்படும் ஒவ்வொரு புள்ளியும் இறுதித் தெரிவை நேரடியாகப் பாதிக்கும். எனவே, நீங்கள் வழங்கும் ஒவ்வொரு புள்ளிக்கும் தெளிவான, நியாயமான மற்றும் ஆதாரபூர்வமான காரணம் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வின்போது எந்தவிதமான தனிப்பட்ட செல்வாக்குக்கும், அரசியல் அல்லது நிர்வாக அழுத்தத்துக்கும் மற்றும் வெளிப்புறத் தலையீட்டுக்கும் துளியளவும் இடமளிக்கக் கூடாது. தகுதி, திறமை மற்றும் சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்காக நியமிக்கப்பட்டுள்ள 6 நேர்முகத் தேர்வுக் குழுக்களும் ஒரே மதிப்பீட்டு அளவுகோல்களினையே பின்பற்ற வேண்டும். ஒரே தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு வெவ்வேறு குழுக்களினால் வெவ்வேறு அணுகுமுறைகள் பின்பற்றப்படக் கூடாது.

அரசாங்க சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வ ஒதுக்கீடுகளும் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். முறைகேடு, பாரபட்சம் அல்லது அதிகாரத் துஷ்பிரயோகம் உறுதிப்படுத்தப்படுமானால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவிதப் பாகுபாடும் இன்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என ஆளுநர் கண்டிப்பாக எச்சரித்த்துள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் சுகாதார உதவியாளர்களுக்கான சேவைப்பிரமாணக் குறிப்பு கட்டாயம் மாற்றியமைக்கப்பட்டு, இவ்வாறான ஆட்சேர்ப்புகளின்போது எழுத்துப் பரீட்சையும் உள்வாங்கப்பட வேண்டும் என ஆளுநர் இதன்போது விசேடமாகக் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், விளம்பரப்படுத்தப்பட்ட நடைமுறைகளுக்கு அமைவாகவே புள்ளிகள் வழங்கப்படும். நேர்முகத் தேர்வின் போதான தொழிலுடன் தொடர்புடைய தொழில்நுட்பக் கேள்வி வங்கியொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு மாற்றுத்திறனாளிகளுக்குரிய 3 சதவீத ஒதுக்கீடும் கட்டாயமாக கவனத்தில் கொள்ளப்படும். அத்துடன், தெரிவு செய்யப்படுபவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் அனைத்தினதும் உண்மைத்தன்மை, உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி உறுதி செய்யப்படும், எனக் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண அரச சேவையின் நம்பகத்தன்மையையும் கௌரவத்தையும் பாதுகாக்கும் வகையில் சகலரும் நேர்மையாகச் செயற்பட வேண்டும் என ஆளுநர் மீளவும் வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), சுகாதார அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலாளர், உதவிச் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் நேர்முகத் தேர்வுக் குழுவினர் ஆகியோர் பங்கேற்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now