New Updates! Fresh news just arrived.

மேல் மாகாணத்தில் டெங்கு அதிகரிப்பு: சம்மாந்துறை பகுதிக்கு...

News

மேல் மாகாணத்தில் டெங்கு அதிகரிப்பு: சம்மாந்துறை பகுதிக்கும் பரவும் அபாயம் – பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவு வேண்டுகோள்!

July 8, 2026 4:32 pm
மேல் மாகாணத்தில் டெங்கு அதிகரிப்பு: சம்மாந்துறை பகுதிக்கும் பரவும் அபாயம் – பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவு வேண்டுகோள்!
மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதால், உயர்கல்வி, தொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அங்கிருந்து கிழக்கு மாகாணம் உட்பட பிற பகுதிகளுக்கு வருகை தரும் நபர்கள் ஊடாக டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு எச்சரித்துள்ளது.

இதனையடுத்து, சமூகத்தில் டெங்கு பரவலைத் தடுக்கும் நோக்கில் பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும், குறிப்பாக மேல் மாகாணத்திலிருந்து காய்ச்சலுடன் அல்லது டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வருகை தருபவர்கள் குறைந்தது 14 நாட்கள் பகல் வேளைகளில் நுளம்பு கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்காக, உடல் முழுவதையும் மூடும் ஆடைகளை அணிவதுடன், நுளம்பு விரட்டி கிரீம்கள் அல்லது ஏற்ற பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு நோயை பரப்பும் Aedes நுளம்புகள் பெரும்பாலும் பகல் வேளைகளில் கடிப்பதால், இந்தக் காலப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் அவசியமானவை என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி, கண் பின்னால் வலி அல்லது வேறு டெங்கு அறிகுறிகள் தென்பட்டால், காலதாமதம் செய்யாமல் உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனை அல்லது சுகாதார நிலையத்தை அணுகுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வீடுவீடாக மேற்கொள்ளப்படும் நுளம்பு பெருகும் இடங்களை கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் சுற்றுச்சூழல் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஊரின் ஆரோக்கியம் நமது கைகளிலேயே உள்ளது. ஒவ்வொருவரின் பொறுப்புணர்வும் டெங்கு பரவலைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது." என சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளதுடன், இந்த விழிப்புணர்வு செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து சமூகப் பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now