New Updates! Fresh news just arrived.

லொத்தரி இலக்கங்களை வைத்து அதிகரிக்கும் சட்டவிரோத சூதாட்டம...

News

லொத்தரி இலக்கங்களை வைத்து அதிகரிக்கும் சட்டவிரோத சூதாட்டம்

August 13, 2026 7:41 am
லொத்தரி இலக்கங்களை வைத்து அதிகரிக்கும் சட்டவிரோத சூதாட்டம்
தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் குலுக்கல் இலக்கங்களை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சட்டவிரோத சூதாட்டம் சமூகத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சிறில் எண்டனி பெரேரா தெரிவித்துள்ளார்.

கோப் (COPE) உபகுழு முன்னிலையில் லொத்தர் சபைகளின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், இந்த விடயம் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

போதைப்பொருள் பிரச்சினைக்கு அடுத்தபடியாக சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இந்த சூதாட்டம் வளர்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் கிராமப்புறங்களில் சுமார் 100 ரூபாய் போன்ற சிறிய தொகைகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சூதாட்டம், தற்போது மிகப்பெரிய பணப் பந்தயமாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெறும் பகுதிகளில் ஒரு பந்தயத்திற்கான தொகை ஒரு இலட்சம் ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 முதல் 9 வரையிலான இலக்கங்களில் இருந்து இரண்டு இலக்கங்களைத் தெரிவு செய்து, அன்றைய லொத்தர் சீட்டின் இறுதி இரண்டு இலக்கங்களுடன் அவற்றை பொருத்திப் பணம் கட்டும் முறையே இங்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் குலுக்கல் இரவு 7.30 மணியளவில் நடைபெறும் நிலையில், ஒரு மாதத்திற்கான குலுக்கல்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டதாக போலியான தகவல்களை பரப்பி, WhatsApp குழுக்கள் ஊடாக இந்த சட்டவிரோத சூதாட்டம் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

பந்தயத் தொகை அந்தந்தப் பகுதிகளின் பொருளாதார நிலைமையைப் பொறுத்து மாறுபடுவதாகவும் கூறப்படுகிறது. நெல் உற்பத்தி அதிகமாக உள்ள மனம்பிட்டி போன்ற பகுதிகளில் ஒரு பந்தயம் 30,000 ரூபாய் வரையும், இரத்தினபுரி போன்ற மாணிக்கக்கல் வர்த்தகப் பகுதிகளில் ஒரு இலட்சம் ரூபாயைத் தாண்டியும் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூதாட்டத்தில் சிக்கிய பலர் தங்களுடைய காணிகள் மற்றும் சொத்துக்களை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவர்கள் சூதாட்டத்திற்கு அடிமையானதால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக பெண்களிடமிருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் தேசிய லொத்தர் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர், அரச புலனாய்வு சேவை மற்றும் மத்திய ஊழல் குற்றவியல் பிரிவிடம் முன்னதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை எதிர்பார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய லொத்தர் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமான லொத்தர் குலுக்கல்கள் தொடர்பிலேயே நேரடியாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால், நிதி அமைச்சின் ஆதரவின்றி இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதில் சிரமங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத சூதாட்டம் தொடர்ந்து விரிவடைந்தால், லொத்தர் சபைகளின் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதுடன், சாதாரண மக்களின் பொருளாதார மற்றும் குடும்ப வாழ்க்கையும் பாரியளவில் பாதிக்கப்படும் என தேசிய லொத்தர் சபையின் தலைவர் எச்சரித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now