New Updates! Fresh news just arrived.

தரகுப் பணம் இல்லாத முறைமையில் அறிமுகமானது TruRout செயலி- ...

News

தரகுப் பணம் இல்லாத முறைமையில் அறிமுகமானது TruRout செயலி- உத்தியோகபூர்வ அறிமுகம்!

July 5, 2026 5:43 pm
தரகுப் பணம் இல்லாத முறைமையில் அறிமுகமானது TruRout செயலி- உத்தியோகபூர்வ அறிமுகம்!
டாக்ஸி சேவைத் துறையில் ஓட்டுநர்களிடமிருந்து கமிஷன் அறவிடாத "தரகுப் பணம் இல்லாத" முறைமையை அடிப்படையாகக் கொண்ட TruRout செயலி, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மொஹமட் முனாசர் முனாஸ் தலைமையில் நேற்று (04) பத்தரமுல்லை வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய நிறுவனத்தின் பிரதிநிதிகள், தற்போது இயங்கிவரும் சில டாக்ஸி சேவை செயலிகள் ஓட்டுநர்களின் வருமானத்தில் சுமார் 15 முதல் 27 சதவீதம் வரை கமிஷன் அறவிடுவதாகவும், அதற்கு மாற்றாக எந்தவித கமிஷனும் இல்லாத சேவையை வழங்குவதே TruRout செயலியின் பிரதான நோக்கம் என்றும் தெரிவித்தனர்.

இதன்படி, ஓட்டுநர்கள் 24 மணி நேர சந்தா (Subscription) அடிப்படையில் ரூ.250 செலுத்தி செயலியைப் பயன்படுத்த முடியும். குறித்த காலப்பகுதியில் அவர்கள் ஈட்டும் முழு வருமானமும் ஓட்டுநருக்கே சொந்தமானதாக இருக்கும் எனவும், நிறுவனம் அதிலிருந்து எந்தவித கமிஷனையும் பெற்றுக்கொள்ளாது எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், ஓட்டுநர்களுக்கு 12 மணி நேர சலுகைக் காலம் (Grace Period) வழங்கப்படுவதாகவும், உடனடியாக சந்தா தொகையை செலுத்த முடியாதவர்கள் அந்தக் காலத்திற்குள் சேவையை மேற்கொண்டு பின்னர் கட்டணத்தைச் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. டிஜிட்டல் கட்டணப் பரிவர்த்தனைகள் இடம்பெறுமானால், சந்தா தொகை மட்டுமே தானாகக் கழிக்கப்படும் எனவும், பயணக் கட்டணத்தில் இருந்து வேறு எந்தக் கமிஷனும் பிடித்தம் செய்யப்படமாட்டாது என்றும் நிறுவனத்தினுடைய பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

நிறுவனத்தினுடைய அறிவிப்பின்படி, எதிர்வருகின்ற ஜூலை 7 முதல் பயணிகள் TruRout செயலியின் ஊடாக டாக்ஸி சேவையினை முன்பதிவு செய்ய முடியும். ஆரம்ப கட்டமாக கொழும்பில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதுடன் TruRout செயலியின் வியாபார பிராண்ட் தூதுவராக இலங்கையின் பிரபல யூடியூபர் அஷேன் சேனரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, ஆரம்ப கட்டத்தில் மோட்டார் சைக்கிள் சேவை வழங்கப்படமாட்டாது என்றும், எதிர்காலத்தில் அதனை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் மேலும் உரையாற்றிய நிறுவனத்தின் பிரதிநிதிகள், இந்த முயற்சி வெறுமனே இலாப நோக்கத்திற்காக அல்லாமல், டாக்ஸி ஓட்டுநர்களின் வருமானத்தைப் பாதுகாத்து, அவர்களுக்கு நியாயமான தொழில் வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டனர்.

அத்தோடு, நாடு முழுவதுமுள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் TruRout செயலியில் பதிவு செய்து பயன்பெறுமாறும், பயணிகளும் செயலியினைப் பயன்படுத்தி சேவையை அனுபவிக்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், செயலி தொடர்பான மேலதிக தகவல்களினை நிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கங்களிலும் மின்னணு செயலி பதிவிறக்க தளங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுலள்ளது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now