New Updates! Fresh news just arrived.

சவூதியில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள அனோஜனின் வீட்டுக்கு சென...

News

சவூதியில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள அனோஜனின் வீட்டுக்கு சென்ற காரைதீவு தவிசாளர்: குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவிப்பு!

September 20, 2026 3:56 pm
சவூதியில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள அனோஜனின் வீட்டுக்கு சென்ற காரைதீவு தவிசாளர்: குடும்பத்தினருக்கு  நேரில் ஆறுதல் தெரிவிப்பு!
சவூதி அரேபியாவில் பணியாற்றி வரும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.எம். ஜலீல் ஆகியோர் அனோஜனின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதன்போது, அனோஜனின் தற்போதைய நிலைமை தொடர்பில் குடும்பத்தினரிடம் கேட்டறிந்த இருவரும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் குடும்பத்தினருக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

அத்துடன், அனோஜனின் விடுதலைக்காக தங்களால் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு சென்று தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒத்துழைப்பதாகவும் உறுதியளித்தனர்.

அதேவேளை, அனோஜனின் குடும்பத்தினரைச் சந்தித்த காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் மற்றும் உறுப்பினர் ஏ.ஆர்.எம். ஜலீல் ஆகியோர், இந்த விடயத்தில் மனிதாபிமான அடிப்படையில் தங்களால் முடிந்தளவு பங்களிப்பை வழங்குவதுடன், அனோஜனின் பாதுகாப்பான விடுதலைக்கான முயற்சிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

அனோஜனின் குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் மற்றும் சமூகத் தரப்பினரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருவதுடன், உரிய அதிகாரிகள் தலையிட்டு அவருக்கான சட்ட மற்றும் இராஜதந்திர உதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.

சவூதி அரேபியாவில் பணியாற்றி வரும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பில் முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், மேல்முறையீட்டின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், அனோஜனின் குடும்பத்தினர் எதிர்கொண்டுள்ள அச்சம் மற்றும் கவலையை கருத்திற்கொண்டு, இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலும் சட்ட ரீதியிலும் உரிய தலையீட்டை மேற்கொண்டு, அனோஜனின் விடுதலை அல்லது தண்டனைக் குறைப்புக்கான சாத்தியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now