New Updates! Fresh news just arrived.

மண்டைதீவு கிரிக்கெட் மைதானம் போன்று நெடுந்தீவு எரிபொருள் ...

News

மண்டைதீவு கிரிக்கெட் மைதானம் போன்று நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையமும் ஏமாற்றம் அளிக்க கூடாது – ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!

July 6, 2026 6:41 pm
மண்டைதீவு கிரிக்கெட் மைதானம் போன்று நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையமும் ஏமாற்றம் அளிக்க கூடாது – ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!
நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி, கடந்த வருடம் மண்டைதீவில் கோலாகலமாக அடிக்கல் நாட்டப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்தினைப் போன்று எரிபொருள் நிரப்பு நிலையமும் எமது மக்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல், எரிபொருள் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு திட்டமிடப்பட்டிருப்பது போன்ற 3 மாத காலப் பகுதியில், அதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் கருத்து தெரிவிக்கையில் -

'நெடுந்தீவின் இருப்பிலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு மானசீகமாக உழைத்து வருகின்ற தரப்பு என்ற அடிப்படையில், தற்போதைய அரசாங்கம் நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை அமைப்பதற்கு தீர்மானித்து அதற்கான அடிக்கல் நாட்டியிருப்பதனை வரவேற்கின்றோம்.

இதேபோன்று, கடந்த வருடம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைத்தானத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவினை ஜனாதிபதி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.

ஆனால், அது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்று தற்போது இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாகம் அறிவித்திருக்கின்றமை துரதிஸ்டவசமானது.

அது எமக்கும் எமது மக்களுக்கும் ஏமாற்றத்தினை அளித்திருக்கின்றது.
அதுபோன்று நெடுந்தீவில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பணிகளும் இடைநடுவில் கைவிடப்படாமல் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

அதைவிட, தீவகத்தில் இன்னும் பல்வேறு தேவைகள் காணப்படுகின்ற நிலையில் அவை தொடர்பாகவும் இந்த அரசாங்கம் கரிசனை செலுத்த வேண்டும்.

குறிப்பாக, நெடுந்தீவில் குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றும் வகையில், எம்மால் உருவாக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தினை மேலும் விஸ்தரித்து அதன் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும்.

அதேபோல், வைத்தியசாலைக்கு தேவையாகவுள்ள குடிநீர் சீரான முறையில் கிடைப்பதற்கான நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோன்று, கடந்த காலங்களில் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட பனை நடுகை திட்டத்தில் நடப்பட்ட நூற்றுக்கணக்கான பனைகள் பெரிய மரங்களாக வளர்ந்துள்ள போதிலும் பனை அபிவிருத்தி சபையின் சீரான பராமரிப்பு இன்று இருக்கின்ற நிலையில் அவை தொடர்பாக கரிசனை செலுத்தி எமது கற்பக தருவான பனை வளத்தினை பெருக்க வேண்டும்.

மேலும் நெடுந்தீவின் கிழக்கு பகுதி கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றமையினால் அதனை தடுத்து நிறுத்தி, எம்மால் பாதுகாக்கப்ட்ட அந்த தீவு தேசத்தினை பாதுகாக்க வேண்டிய அவசர கட்ப்பாடு தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

இவ்வாறு அடையாளம் காணப்படுகின்ற அனைத்து பிரச்சினைகளும் இந்த அரசாங்கத்தினால் தீர்க்கப்பட வேண்டும் என்பதே மக்களினதும் எமதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.' என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now