New Updates! Fresh news just arrived.

இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை: சில பகுதிகளில் 2...

News

இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை: சில பகுதிகளில் 200 மி.மீ.க்கும் அதிக மழை எதிர்பார்ப்பு; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

May 13, 2026 9:40 am
இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை: சில பகுதிகளில் 200 மி.மீ.க்கும் அதிக மழை எதிர்பார்ப்பு; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இன்று (13) காலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள ‘அம்பர்’ (Amber) நிற எச்சரிக்கை அறிக்கையானது, பி.ப. 3.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடகிழக்கில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இந்த தொகுதி எதிர்வரும் சில நாட்களில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இந்த அமைப்பின் தாக்கத்தால், நாட்டில் தற்போது நிலவும் மழை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி:
மிகப் பலத்த மழை: மேல், சபரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மி.மீ. இற்கும் அதிகமான மிகக் கடுமையான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த மழை: வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ. அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மாகாணங்களிலும், அநுராதபுரம், திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

தற்போதைய மழைவீழ்ச்சி தரவுகள்:
நேற்று காலை முதல் இன்று காலை 6.30 மணி வரையிலான காலப்பகுதியில் உச்ச மழைவீழ்ச்சி பின்வரும் பகுதிகளில் பதிவாகியுள்ளன:

கெஸ்பேவ (கொழும்பு) – 204.0 மி.மீ
வேயங்கொடை (கம்பஹா) – 145.5 மி.மீ
கிலிமலே (இரத்தினபுரி) – 121.0 மி.மீ
தெவிதுர தோட்டம் (காலி) – 102.5 மி.மீ
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்:
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now