New Updates! Fresh news just arrived.

அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு: நுக...

News

அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு: நுகர்வோர்கள் பெரும் சிரமம்!

February 25, 2026 7:24 pm
அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு: நுகர்வோர்கள் பெரும் சிரமம்!
நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் அம்பாறை மாவட்டத்திலும் அதன் தாக்கத்தினை அவதானிக்க முடிகின்றது.

இதன்படி, கடந்த 4 நாட்களுக்கு மேலாக அம்மாவட்டத்திலுள்ள பல்வேறு விற்பனை முகவர்களிடமிருந்து எரிவாயு சிலிண்டர்களினை நுகர்வோர்கள் பெற முடியாமல் சிரமப்படுவதினை காண முடிகின்றது.

மேலும் எந்தவிதமான சமயல் எரிவாயு சிலிண்டர்களும் சில தினங்களாக விநியோகப்படாமையால் பல பகுதிகளிலும் சமயல் எரிவாயு தட்டுப்பாடானது உணரப்பட்டுள்ளது.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் நிந்தவூர்,காரைதீவு மற்றும்மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை மற்றும் பெரியநீலாவணை ஆகிய பிரதேசங்களில் வர்த்தக நிலையங்களின் முன்பாக மணிக்கணக்கில் பொதுமக்கள் காத்திருந்து சமையல் எரிவாயுவை பெற்றுச் செல்கின்றனர்.

அதிலும் எதிர்வரும் நாட்களில் எரிவாயு தட்டுப்பாடானது நிலவும் என்றும் பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைந்திருப்பதினால் சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய நீண்ட நேரம்காத்திருந்து பெற்றுச் செல்கின்றனர்.

மேலும், இவ்வாறு காத்திருந்து ம் கூட எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் ஏமாற்றத்தோடு, வீடு திரும்பும் நிலையும் தற்போது நிலவுகின்றது .விநியோகம் குறைவாக இருப்பதினாலும் தேவை அதிகமாக இருப்பதினாலும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். இது அத்தியாவசியத் தேவைகளினை பூர்த்தி செய்வதில் பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்துகின்றது என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக கடந்த சில தினங்களிலிருந்து குறித்த தட்டுப்பாட்டு நிலமை காணப்படுவதோடு, நகரத்திலுள்ள அநேகமான விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டர்கள் முற்றாக தீர்ந்துள்ளது.நிறுவனத்திலிருந்து வருகின்ற லொறிகள் வரவில்லை எனவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளதோடு, ஒரு சில நாட்களில் அது சீராகும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் வழமையினை விடக் குறைவான அளவு சிலிண்டர்களே விநியோகிக்கப்படுவதாகவும் விநியோகஸ்தர்கள் தெரிவிப்பதோடு, இன்னும் சில இடங்களில் விநியோகம் தாமதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சில பகுதிகளில் இன்னும் விநியோகிக்கப்படாமல் முடங்கி இருப்பதாகத் தெரியவருகின்றது இரண்டு வகை சமையல் எரிவாயுகளில் ஒன்றினை கூட கொள்வனவு செய்ய முடியாது நுகர்வோரும் பெரும் சிரமங்களுக்குள்ளாகி உள்ளனர்.

மேலும், சில வர்த்தக நிலையங்களில் 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் முடிவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் 05 கிலோ கிராம் சிலிண்டர் 02.3 கிலோ கிராம் சிலிண்டர் கையிருப்பிலிருப்பதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தவிர லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே 3 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களினை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் எரிவாயு பற்றாக்குறையானது நிலவுவதினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் நாட்டில் நிலவும் எரிவாயு பற்றாக்குறையின் காரணமாக 3900 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயுவுடனான கப்பல் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை (23) நாட்டை வந்தடைந்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இன்று (25) மற்றும் எதிர்வரும் 28 ஆம் திகதி 7600 மெட்ரிக் தொன் எரிவாயுவினை ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளதாகவும் மற்றுமொரு தகவலும் வெளியாகியுள்ளது.

எனவே கடந்த சில நாட்களாக லிற்ரோ, லாஃப் இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நோன்பு காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியங்களினை ஏற்படாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now