New Updates! Fresh news just arrived.

மஹிந்தானந்த, நளின் வழக்கு - உத்தரவு அறிவிப்பு பிற்போடல்! ...

News

மஹிந்தானந்த, நளின் வழக்கு - உத்தரவு அறிவிப்பு பிற்போடல்!

February 5, 2026 12:57 pm
மஹிந்தானந்த, நளின் வழக்கு - உத்தரவு அறிவிப்பு பிற்போடல்!
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஆரம்ப ஆட்சேபனைகள் மீதான உத்தரவை அறிவிப்பது மார்ச் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) அறிவித்தது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக 14,000 கரம்போர்ட் பலகைகளையும் , 1,000 தாம் பலகைகளையும் இறக்குமதி செய்து, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் அலுவலகங்களுக்கு விநியோகித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 53 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவிருந்தது.

கடந்த வருடம் மேல் நீதிமன்றத்தினால் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகளை வலுவற்றதாக்கி, அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் தம்மை விடுவிக்குமாறு கோரி குறித்த இரண்டு முன்னாள் அமைச்சர்களும் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளனர்.

இதற்கிடையில், இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குறித்த உத்தரவு இன்று அறிவிக்கப்படவிருந்த போதிலும், அந்த உத்தரவு எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக்க ஸ்ரீ ராகல தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now