New Updates! Fresh news just arrived.

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்க...

News

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

August 24, 2026 1:02 pm
மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்
நீண்டகாலமாக நிலவி வரும்
மாளிகைக்காடு மையவாடி தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மாளிகைக்காடு பொது அமைப்புக்களின் சம்மேளனம் தவிசாளருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில்,
காரைதீவு பிரதேச சபையில்
மாளிகைக்காடு பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊர் பிரமுகர்களுக்கும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் அவர்களுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் அவர்களும் கலந்து கொண்டார்.

மாளிகைக்காடு மையவாடி விவகாரம் தொடர்பில் பிரதேச மக்கள் மத்தியில் காணப்படும் கரிசனைகள், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மையவாடி என்பது ஒரு சமூகத்தின் முக்கியமான சமய, பண்பாட்டு அடையாளமாக மட்டுமன்றி, தலைமுறைகளுடன் தொடர்புடைய உணர்வுபூர்வமான பொதுச் சொத்தாகவும் காணப்படுவதால், அது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை உள்வாங்கி, சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

அதேபோல மாளிகைக்காடு மக்களின் நீண்டகால தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கருத்திற்கொண்டு, மையவாடி தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தரமானதும் முக்கியமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் அவர்களுடன் பள்ளிவாசல் தலைமைகளும் ஊர் பிரதிநிதிகளும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

அதேவேளை, பிரச்சினையை எந்தவொரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும், சட்டரீதியான நடைமுறைகளுக்கு அமைவாகவும், சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைப் பாதிக்காத வகையிலும் அணுக வேண்டியதன் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டது.

மாளிகைக்காடு மக்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் பிரதேசத்தின் எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்ந்து கலந்துரையாடி உரிய தீர்வொன்றை நோக்கி நகர்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

மாளிகைக்காடு மையவாடி விவகாரம் தொடர்பில் பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்புகள் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் நேரடியாக கலந்துரையாடியமை, பிரச்சினையை புரிந்துணர்வு மற்றும் கலந்துரையாடல் ஊடாகத் தீர்ப்பதற்கான முக்கியமான முன்னெடுப்பாக அமைந்துள்ளதாக பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.

எதிர்கால நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு, மாளிகைக்காடு மக்களின் நலனையும் சமூக ஒற்றுமையையும் முதன்மைப்படுத்தி தீர்வு காண்பதற்கான முயற்சிகள் தொடர வேண்டுமெனவும் அவர் தனது எதிர்பார்ப்பை வெளியிட்டார்.

( நூருல் ஹுதா உமர்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now